புலம் பெயர்ந்துள்ள ஈழத் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும் வேலூரில் முன்னாள் வடக்கு முதல்வர் விக்கி

இந்தியா உட்பட மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்று முன்னாள் வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த வாரம் இந்திய விஜயத்தை மேற்கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

வேலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழர் திருநாள் விழா, திருவள்ளுவர் விழா என்பன வேலூர் ஊரீசு கல்லூரியில் கடந்த வாரம் நடைபெற்ற போது விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். அவர் விழாவில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிகழ்வின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, அவர் செய்தியாளர்களிடம் உரையாற்றுகையில்,

இந்தியா உட்பட மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்ப வேண்டும். அவ்வாறு இந்தியாவில் இருந்து இலங்கை திரும்புபவர்களுக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பில் தன்னிறைவு அடையும் வரை இந்தியாவிற்கு வந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். இதனைக் கருத்திற் கொண்டு இந்திய அரசு, இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கிடவும் வேண்டும்.

போர்க் காலங்களில் இலங்கையிலிருந்து 10 இலட்சம் தமிழர்கள் வெளியேறி விட்டனர். அவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினால் தமிழர்களுக்குரிய வளமான வாழ்க்கைச் சூழ்நிலையை ஏற்படுத்திட பலமாக அமையும். மேலும், அவ்வாறு இலங்கையில் இருந்து வெளியேறிய தமிழர்களின் 65ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாக உள்ளன. அங்கு இன்னும் இராணுவ முகாம்கள்தான் உள்ளன. அந்த நிலங்களை தமிழர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தி வருகின்றோம்.

புதிய இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ஸவிற்கு பெரும்பான்மை தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதால், அவர் தனது அரசியல் வாழ்க்கையை சிங்கள, பௌத்தர்களுக்கு ஆதரவானதாக மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சம் உள்ளது. அவரது போக்கு விரைவில் வரக்கூடிய பிரதமர் தேர்தலுக்குப் பின்னரே உறுதியாக தெரியவரும். அவ்வாறு கோத்தபயா ராஜபக்ஸ சிங்கள, பௌத்தர்களுக்கு ஆதரவான நிலைப்பாடுகளை மேற்கொண்டால் சர்வதேச அளவில் தமிழ் மக்களின் எதிர்ப்புகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்றார்.