புதுக்குடியிருப்பில் குண்டு வெடிப்பு; படுகாயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்றில் 41 வயதான பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது:-

தனது காணியில் இருக்கின்ற பனை மரத்துக்கு அருகாமையில் குப்பைகளைக் கூட்டி வைத்து நெருப்பு பற்றவைத்த வேளையில் பாரிய சத்தத்துடன் குண்டொன்று வெடித்தது. இதன்போது குறித்த பெண் படுகாயமடைந்தார்.

அவர் உடனே புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த புதுக்குடியிருப்புப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பகுதியில் வெடிபொருட்கள் இருக்கின்றதா என்பது தொடர்பாகவும் ஆராய்ந்து வருகின்றனர்.