புதிய திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதில் கோத்தபாயா தீவிரம்

ஏற்கனவே சிறீலங்காவின் வர்த்தகமானியில் பிரசுரிக்கப்பட்ட 20 ஆவது திருத்தச்சட்டத்தை திருத்தங்கள் எதுவுமின்றி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22) நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதில் சிறீலங்காவின் அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா தீவிரமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சட்டத்தை ஆய்வு செய்த குழுவினர் முன்வைத்த திருத்தங்களை கைவிடுவதுடன், இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள் நாடாளுமன்றம் செல்லமுடியும் என்ற திருத்தம் தொடர்பில் ஆய்வு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

செவ்வாய்கிழமை முன்வைக்கப்படும் திருத்தச்சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள், பொது அமைப்புக்கள் உயர் நீதிமன்றத்தில் ஒரு வாரத்தில் வழக்கு தாக்கல் செய்யமுடியும். உயர் நீதிமன்றம் அதன் தீர்ப்பை 3 வாரத்திற்குள் அளிக்கவேண்டும். எனவே திருத்தச்சட்டம் எதிர்வரும் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். அதாவது புதிய அரசின் முதலாவது வரவுசெலவுத்திட்டத்திற்கு முன்னர் அதனை நிறைவேற்ற அரசு முயன்றுவருகின்றது.

இதனிடையே, ஆரவாரமாக ஆரம்பித்த அரசாங்கத்தின் பயணம், முதல் இரண்டு மாதத்திலேயே விபத்தை சந்தித்துள்ளது. ஏனெனில் எதிர்கட்சிகளுக்கு அப்பால், அரசாங்கத்தை பதவியேற்றிய சிங்கள, பெளத்த தேசிய சக்திகளில் கணிசமான பிரிவினரையே அரசின் இந்த 20 ஆவது திருத்தச்சட்டம் திகைப்படைய வைத்துள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எம்.ரி.வி தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.