புதிய அரசியலமைப்பு வரைபு குழுவில் மலையக தமிழ் பிரதிநிதி ஒருவரையும் நியமியுங்கள்

இந்நாட்டில் நிலவி வரும் அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளுக்கான வழிகளை புதிய அரசியலமைப்பு ஏற்படுத்திட வேண்டும் என நாம் விரும்புகிறோம், புதிய அரசியலமைப்பு வரைபு குழுவில் மலையக தமிழ் பிரதிநிதி ஒருவரையும் நியமியுங்கள் என தமுகூ தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவத்துள்ளதாவது:

புதிய அரசியலமைப்பை வரைவதற்கான ஒரு குழுவை ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நீங்கள் நியமித்துள்ளீர்கள். இதை நாங்கள் சாதகமாகவே பார்க்கிறோம்.

இதன் மூலம் இந்நாட்டில் நிலவி வரும் அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளுக்கான வழிகளை புதிய அரசியலமைப்பு ஏற்படுத்திட வேண்டும் என நாம் விரும்புகிறோம்.

இந்நிலையில் உங்களால் நியமிக்கப்பட்டுள்ள குழுவில், வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களின் மற்றும் முஸ்லிம் மக்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதிகள் இடம்பெறுகின்றமை எமக்கு மகிழ்ச்சியை தருகின்றது.

எனினும், இந்நாட்டில் வாழும் சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய பிரதிநிதி இடம்பெறாமை எமக்கு கவலை தருகிறது. இது தற்செயலாக ஏற்பட்ட இடைவெளி என நாம் கருதுகின்றோம்.

எனவே தங்களால் நியமிக்கப்பட்டுள்ள குழுவில், சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்ய தகுதி வாய்ந்த ஒரு பிரதிநிதியை நியமிக்கும்படி வேண்டுகிறேன்.

நீங்கள் கேட்டுக்கொள்வீர்களாயின், தகுதி வாய்ந்த பிரதிநிதிகளின் பெயர்களை தங்கள் பரிசீலனைக்காக சிபாரிசு செய்யவும் நான் தயாராக இருகின்றேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இது தொடர்பில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச அவர்களுக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் எழுத்து மூல கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூட்டணியின் தலைவர், கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.