பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடுவதற்கும், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் என்ன சம்பந்தம்-எம்.கே.சிவாஜிலிங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடுவதற்கும், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்  கேள்வி எழுப்பியுள்ளார்.

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு என்ன நடந்தது என்ற விடயத்தை அரசாங்கம் நாட்டின் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் மூடி மறைத்து முழுப் பொய்களை சொல்லி வருகின்றது என்று  எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்குவதில் சிக்கல் நிலை காணப்படுவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

தலைவர் பிரபாகரனின் மரண பரிசோதனை அறிக்கையை வழங்குமாறு கோரி, தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் மிதுன் ஜயவர்தன தாக்கல் செய்த கோரிக்கைக்கு பதிலளித்தபோதே பாதுகாப்பு அமைச்சு இதைக் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில்  மேலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்  கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிரிழந்ததாக கூறப்பட்ட பின்னர், உயிரிழந்தது அவர்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்காக அவரின் உடலை தாங்கள் மரபணுப் பரிசோதனை செய்து உறுதிப்படுத்தினோம் என்று யுத்தம் முடிந்த ஒரிரு நாட்களில் அரசாங்கம் அறிவித்திருந்தது,

2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் மரபணுபரிசோதனை செய்து கொள்வதற்கான வசதிகள் இருந்திருக்கவில்லை. இந்தியாவின் ஐதராபாத்திலும், சிங்கப்பூர் போன்ற இடங்களில்தான் அந்த வசதி இருந்தாக நாங்கள் அறிந்து கொண்டோம்.

ஆகவே யுத்தம் முடிந்த ஒரிரு நாட்களில் மரபணுப்பரிசோதனை செய்ததாக பொய்யான தகவலை அரசாங்கம் வெளியிட்டிருந்தது.

ஒருவேளை அவரின் உடல் என்று சொல்லப்பட்டதில் இருந்த ஒரு பகுதியை எடுத்துவைத்து, பின்னர் பிரபாகரனின் தந்தை, தயார் அல்லது சகோதர்களான டென்மார்க்கில் உள்ள மூத்த சகோதரர், இந்தியாவில் தமிழ் நாட்டில் வாழும் சகோதரி, கனடாவில் வாழும் மற்றுமொரு சகோதரி போன்றவர்களிடம் எந்த கால கட்டத்திலும் மரபணு மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்படவில்லை.

ஆனால் தந்தையாரும், தாயாரும், யுத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து 3 நாட்களின் பின்னர்தான் அரசாங்கத்தில் பாதுகாப்பில் இருந்து எடுக்கப்பட்டார்கள்.

அவர்கள் இராணுவ தடுப்பு முகாமான பலாங்கொடையில் இருந்த போது, அவர்களுக்கே தெரியாமல் அரசாங்கம் மாதிரிகளைப் பெற்றுக் கொண்டாதா? அல்லது தந்தை இறந்த பின்னர் அவரின் உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டதா? அதேபோல வைத்தியசாலையில் இருந்த போது அவரின் தாயாரின் மாதிரிகளும் அவர்களுக்கு தெரியாமல் பெற்றிருக்கக் முடியும்.

பிரபாகரனின் தாயார் 2011 ஆம் ஆண்டு மாசி மாதம் 20 ஆம் திகதி காலமாகியிருந்தார். ஆவருடைய தகனக்கரியைகள் 22 ஆம் திகதி நடைபெற்றது. அன்று நள்ளிரவு வேளை சிதையிலே இருந்த அவரின் அஸ்திகளின் மேலே 4 நாய்களை இராணுவத்தினர் சுட்டு கொலைசெய்து கோர தாண்டவத்தை ஆடிச் சென்றிருந்தனர். அப்போது வேண்டுமென்றால் தாயாரின் அஸ்தியைக்கூட எடுத்துச் சென்றிருக்க முடியும்.

இவ்வாறான நிலைமையிலே பிரபாகரனின் மாதிரிகளை நாங்கள் எடுத்து வைத்திருந்தோம், அதை அவருடைய தந்தை அல்லது தாயாரின் மாதிரிகளுடன் ஒப்பிட்டு உறுதிப்படுத்தினோம் என்று செல்வதற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் குந்தகம் என்பதற்கும் என்ன தொடர்பு உள்ளது.

அரசாங்கம் பச்சைப் பெய்யை சொல்லுகின்றது. ஓரு பிரேத பரிசோதனை நடத்தப்படவேண்டும் என்றால், சட்டவைத்திய அதிகாரி முன்னால்தான் நடத்தப்பட வேண்டும். ஆனால் அவ்வாறான ஒன்று நடந்ததாக அரசாங்கம் இதுவரை கூறவில்லை.

அதைவிட ஒரு நீதிபதி முன்னால்தான் மரண விசாரணை நடைபெறவேண்டும். நீதிபதிதான் பிரேத பரிசோதனை நடத்துவதற்கான உத்தரவை வழங்க வேண்டும். அவ்வாறான எதுவும் இங்கு நடக்கவில்லை.

கருணாவையும், தயா மாஸ்டரையும் கொண்டு சென்று காட்டியவர்களுக்கு, ஒரு நீதிபதியையும் அல்லது ஒரு சட்டவைத்திய அதிகாரியையும், உலங்கு வானூர்தி மூலம் அழைத்துச் செல்வதற்கு அரசாங்கத்திற்கு என்ன தடை இருந்தது.

அரசாங்கம் தொடர்ந்தும் பொய்யையும், பித்தலாட்டமும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையே  பெய்மையாமக்குகின்றது. தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்புச் செய்வது உட்பட அரசாங்கம் நினைத்தவற்றை செய்வதற்கு தேசிய பாதுகாப்பு என்ற வார்த்தையை பயன்படுத்துவது போல, பிரபாகரனின் விடயத்தையும் மூடி மறைப்பதற்காக திட்டமிட்டு தேசிய பாதுகாப்பு என்பதை, நாட்டின் பாதுகாப்பு துறையும், படைத்துறையும் பயன்படுத்தியுள்ளது என்பதே உண்மை என்றார்.

நன்றி- வீரகேசரி