பிரதமர் மஹிந்த என்னை ஏமாற்றிவிட்டார்; அம்பிட்டிய சுமணரத்ன தேரர் ஆதங்கம்

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தன்னைத் தொடர்புகொண்டு பேசுவார் என நினைத்தபோதிலும் அது இதுவரை நடக்கவில்லை என மட்டக்களப்பு மங்களராமைய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

“கடந்த 21ஆம் திகதி இடம் பெற்ற சம்பவம் தொடர்பில் நான் முன்னெடுத்த நடவடிக்கையின் காரணமாக நாட்டு மக்கள் மத்தியில் பாரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. என்னோடும் அவர்கள் பேசினார்கள். இது குறித்து நீதிகிடைக்குமா என்பது குறித்து நாம் பார்த்து கொண்டுள்ளோம். நியாயம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.

இந்த நாட்டின் பௌத்த கலாசார அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ காணப்படுகிறார். எனவே, நான் நினைத்தேன் இந்த விடயம் தொடர்பாக அவர் அல்லது விடயம் தொடர்பான அதிகாரி ஒருவர் என்னோடு பேசுவார் என்று. அது இதுவரை நடக்கவில்லை. தொல்பொருள் திணைக்கள அதிகாரி ஒருவராவது இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து எனக்கு சார்பாக நீதிமன்றில் பேசுவார் என்று நான் நம்பினேன்.அதுவும் நடக்கவில்லை.

ஜனாதிபதி கூட அரச மற்றும் தனியார் மக்களிடையே காணப்படும் பிரச்னை குறித்து ஆராய்ந்து வருகிறார். இருந்தாலும் இந்த விடயம் குறித்து அவர் கூட கவனம் செலுத்தவில்லை. நாட்டு மக்களே இந்த விடயம் தொடர்பாக போராடிவரும் போது, ஜனாதிபதி இதனைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமை கவலைக்கிடமாக உள்ளது.

அன்று தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வந்து பொலிஸார் எனக் கூறி விவசாயிகளைத் துரத்திவிட்டார்கள். அது குறித்து நான் தேடிப்பார்த்து கதைக்கப் போய் அவர்களை நான் தாக்கியதாக வழக்கு தொடர்ந்துள்ளனர். நான் செய்ததை பிழை எனக்கூறி என்னைத் தண்டித்தால் நான் அதனையும் பொறுமையுடன் பார்த்து கொண்டிருப்பேன்” என்றார்.