பாதுகாப்பு அமைசர் யார்? அரசியலமைப்பை அரசு மீறுவதாக அனுரா குமார குற்றச்சாட்டு

பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகிப்பது யார் என்பது தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

174 பில்லியன் ரூபா பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளளது. அந்த அமைச்சு பொறுப்புக் கூறும் அமைச்சர் யார்?. வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடாவிட்டாலும் அரச பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதியே உத்தியோகபூர்வமற்ற வகையில் வகித்து வருகிறார்.

இது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது. இதன் மூலம் அரசமைப்புச் சட்டம் மூன்றாவது முறையாக மீறப்பட்டுள்ளது. அரச பாதுகாப்பு அமைச்சர் யார் என்பதை அறிவிக்காது அமைச்சின் செலவுகளுக்கு நிதியை கோருவது எந்தளவுக்கு தார்மீகமானது எனவும் அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.