பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி குறித்து அடுத்த வாரமளவில் தீர்மானிக்கப்படவுள்ளது

பல கட்டங்களாக பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த முடிவு அடுத்த வாரமளவில் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி குறித்து அடுத்த வாரமளவில் தீர்மானிக்கப்படவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பை பெற்று பாடசாலைகளை மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஆனால் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை ஆரம்பிக்க இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து பாடசாலைகளிலும் கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவித்த அவர், சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய கிருமி ஒழிப்பு நடவடிக்கையின் பின்னர் 4 நாட்கள் வரை பாடசாலைகளை மூட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் கட்டமாக சாதாரண தர மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாகவும், அதன் பின்னரே ஆரம்ப பிரிவு மாணவர்கள் குறித்து கவனம் செலுத்துவதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.