2009 ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட மகனைத்தேடி போராடிய மற்றுமொரு தாய் மரணம்.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த முடிவின் போது காணாமல் ஆக்கப்பட்ட தனது ஒரேயொரு பிள்ளையான பாலசுப்ரமணியம் அருட்செல்வனை (காணாமல் ஆக்கப்பட்ட போது வயது 21) கடந்த பத்து வருடங்களாக தேடிக் கொண்டிருந்த தாயார் பாலசுப்ரமணியம் மங்கையற்கரசி (72 வயது) இன்று 4.3.2020 புதன் கிழமை அதிகாலை 2.10 மணியளவில் சுகவீனம் காரணமாக இயற்கை எய்தினார்.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையை சொந்த முகவரியாகவும், வவுனியா புளியங்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட இந்த தாயார், காணாமல் ஆக்கப்பட்டாேரை தேடிக்கண்டறியும் உறவுகளால் வவுனியாவில் நடத்தப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று ஆயிரத்து நூற்று பதினொரு நாட்களை (1111) எட்டியுள்ள நிலையில், அப்போராட்டத்தில் தொடர்ச்சியாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த நிலையில் இயற்கை எய்தியுள்ளார்.

இவரது மகன் பா.அருட்செல்வன் ஓமந்தை சோதனைச்சாவடியில் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக கண் கண்ட சாட்சிகள் தன்னிடம் கூறியிருந்ததாக தாயார் பா.மங்கையற்கரசி தெரிவித்திருந்தார்.

தாயாரது இறுதிக் கிரியைகள் யாழ்ப்பாணம் தட்டாதெருச்சந்தி, இலக்கம் 29/16, உடையார் ஒழுங்கையில் நாளை 5.3.2020 வியாழக்கிழமை 12.00 மணிக்கு இடம்பெறும் என்று உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

தொடர்புகளுக்கு: 077 2671 941