பல்வேறு கோரிக்கைகளுடன் ஆரம்பித்த சக்கரநாற்காலி பயணம் வவுனியாவை வந்தடைந்தது.

நேற்று (01.02) காலை 08.30 மணியளவில் யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் இருந்து ஆரம்பித்த சற்கர நாற்காலி பயணமானது இன்றையதினம் (02.02) வவுனியாவை வந்தடைந்தது.

முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட ம.மொகமட் அலி அவர்களுடன் இணைந்து ஜெகதீஸ்வரன், சகோதர மொழிபேசும் பிறேமசந்ர ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகள் பூத்தி செய்யப்பட வேண்டும் என்பதற்காகவும், மும்மதங்களுக்கிடையிலான சமூக நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்காகவும் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை முழுதுமான சுற்றுபயணம் சுதந்திரதினம் அன்று கொழும்பை சென்றடையவுள்ளது.

DSC 0029 பல்வேறு கோரிக்கைகளுடன் ஆரம்பித்த சக்கரநாற்காலி பயணம் வவுனியாவை வந்தடைந்தது.

DSC 0079 பல்வேறு கோரிக்கைகளுடன் ஆரம்பித்த சக்கரநாற்காலி பயணம் வவுனியாவை வந்தடைந்தது.

வவுனியாவை வந்தடைந்த மூவரையும் புதிய பேருந்து நிலையத்தில் வைத்து வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் , வர்த்தக பிரதிநிதிகள் , பொதுமக்கள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்தியிருந்தார்கள். அவர்களின் செலவுக்காக தமிழ் விருட்சம் அமைப்பினர் 10,000 ரூபாவையும், வவுனியா வர்த்தக சங்கத்தினர் ரூபா 10,000 வழங்கி இருந்தனர்.

இவர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர் மாற்றுத்திறனாளிகளான நாம் சமூக நல்லிணக்கம் வேண்டியும் எம்மைப்போன்ற நாடு முழுவதிலுமுள்ள மாற்றுத்திறனுடையோரின் சிறப்பான எதிர்கால வாழ்வு கருதியும் சக்கர நாற்காலியில் இலங்கையைச்சுற்றி வலம் வருகிறோம். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் பின்வரும் கோரிக்கைகளை நாம் இந்த சமூகத்திற்கு முன் வைக்கிறோம்.

இன ரீதியான நல்லிணக்கத்தை இந்த நாட்டில் அனைவரும் பின்பற்ற வேண்டும். மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் ஏனையோர் அனுபவிக்கும் சகல உரிமைகள் சலுகைகளையும் அனுபவிக்க வழிசமைக்க வேண்டும். நாட்டிலுள்ள சகல மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதாந்த கொடுப்பனவு 5000 ரூபாவை வழங்கி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக சமய கலாச்சார விளையாட்டு கல்வி பொருளாதார விடயங்களில் சமவாய்ப்பு சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும். அனைவருக்கும் அணுகு வசதிகளை பொது நிறுவனங்கள், அரங்கு மேடைகள், பொதுமலசலகூடங்கள், பொதுப்போக்குவரத்துகள், பொதுக்கட்டிடங்கள், அலுவலகங்கள், வைத்தியசாலைகள், சேவை மையங்கள், போக்குவரத்து தரிப்பிடங்கள் என சகலதுறைகளிலும் அணுகுவசதி ஏற்படுத்தப்பட வேண்டும். வங்கிகள் வைத்தியசாலைகள் போன்ற சேவை பெறும் மையங்களில் எமக்கு முன்னுரிமை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.

மேற்குறித்த எமது உரிமைகள் சலுகைகள் என்பவற்றைப்பெற்றுத்தரும் நல்ல நோக்கம் கொண்ட எமது நாட்டு அதி உத்தம ஜனாதிபதியாகிய தாங்கள் பல வகைககளில் எமக்கு பக்கப்பலமாக உறுதுணையாக இருக்கிறீர்கள். உங்கள் சிந்தனையில் இவற்றையும் கருத்தில் கொண்டு செயற்படுத்த வேண்டுமென அந்த மரதனோடத்தில் பங்குபற்றும் மூவராலும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட உள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட ம.மொகமட் அலி மாற்றுத்திறனாளிகள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சமூகங்களிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் நாடளாவிய ரீதியில் சக்கரநாற்காலி பயணத்தை கடந்த வருடம் பெப்ரவரி 1ம் திகதி ஆரம்பித்து முடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.