பத்தாயிரம் பேருடன் இந்தியா செல்வதென்பது டக்ளஸின் ஏமாற்று பேச்சு -தேசிய மீன்வர் ஒத்துழைப்பு இயக்கம் சாடல்

பத்தாயிரம் பேருடன் இந்தியா செல்லப் போகின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளமை ஏமாற்று வேலை என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் முரளிதரன் சாடியுள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கடற்றொழில் அமைச்சர் பத்தாயிரம் பேருடன் இந்தியா செல்வதாக கூறியுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“டக்ளஸ் தேவானந்தாவை பொறுத்தவரையில் அவர் அமைச்சர். தனது அமைச்சு பதவியை தமிழ் மக்கள் மத்தியில் தக்க வைத்துக்கொள்வதற்கான ஒரு ஏமாற்று வேலையாகவே  நாம் இந்த விடயத்தினை பார்க்கின்றோம்.

ஒரு அதிகாரமுள்ள அமைச்சருக்கு தெரியும் கடற்கரையில் இருந்து 10 கிலோ மீற்றருக்கு உட்பட்ட பிரதேசத்தில் இந்திய ரோலர் வந்து தொழில் செய்கின்றது. இதை கரையில் இருந்து நாங்கள் பார்க்கின்றோம்.

அனைத்து கடற்கரையிரும் கொக்குத்தொடுவாயில் இருந்து தீவகம் வரை 50 மீற்றருக்கு ஒரு கடற்படையின் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளது. கடற்படைக்கு இந்திய ரோலர் வருவது தெரியும். எனவே அதனை பிடிக்க முடியாது என்றால் ஏன் அமைச்சர் என்று சொல்லுகின்றார்.

அந்தஸ்துள்ள அமைச்சர் பத்தாயிரம் பேருடன் இந்தியா செல்வதென்றால் யாரை ஏமாற்றுகின்றார். இது மக்களை ஏமாற்றும் விடயம்“ என்றார்.