மாத்தறை நீதிமன்றம் விதித்த வழக்கில் முன்னிலையாகத் தவறியதற்காகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தற்போது அமெரிக்காவில் உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை, அமெரிக்க நீதிமன்ற உத்தரவின்படியே, இலங்கைக்கு திரும்பக் கொண்டுவர முடியும் என்று முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்சவை நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவருவதற்காக அரசாங்கம் சர்வதேச அளவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படும் தகவல் குறித்து கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
பசில் ராஜபக்சவை இலங்கைக்கு கொண்டுவருவது சாத்தியம் என்றும், ஆனால் அது எளிதான காரியம் அல்ல என்றும் அலி சப்ரி கூறினார்.
இதனை அமெரிக்க நீதிமன்றத்திற்குப் பரிந்துரைத்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இன்டர்போலின் (Interpol)முழு ஆதரவுடன் பசில் ராஜபக்சவை இங்கு கொண்டுவரவும், அவரை கொண்டுவருவதற்காக இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாத்தறைப் பகுதியில் ஒன்றரை ஏக்கர் நிலத்தை முறைகேடாக வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு மாத்தறை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கில் முன்னிலையாக தவறியதையடுத்து, பசில் ராஜபக்சவுக்கு இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது



