நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 1,091 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 5 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் காணாமல் போயுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலை தற்போது சற்று தணிந்துள்ளதாக மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் குறிப்பிட்டார்.
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை தொடர்பாக நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மாவட்ட செயலாளர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், நுவரெலியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 20 நலன்புரி முகாம்களில் 523 குடும்பங்களைச் சேர்ந்த 2,195 நபர்கள் தங்கியுள்ளனர் என்றும், 224 நபர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர் என்றும் கூறினார்.
நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களால் 2 வீடுகள் முழுமையாகவும், 90 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்த மாவட்டச் செயலாளர், வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் வடிந்தோடியதும், அந்த மக்களை மீண்டும் அவர்களது சொந்த வீடுகளுக்கே அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்தார்.



