நான்கு பிரதேச செயலகங்களிலும் முன்னுரிமை திட்டங்களை சமர்ப்பிக்க கோரப்பட்டது.

வவுனியா மாவட்டத்தின் தேவைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

அரச அதிபர் எம்.கனீபாவின் ஒழுங்குபடுத்தலில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது வவுனியாவின் நான்கு பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

அந்தவகையில் வவுனியா நகரம் மற்றும் உப நகரங்களிற்குட்பட்ட முக்கிய வீதிகள் புனரமைக்கப்படுவது, விவசாய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஏதுவான குளங்களை புனரமைத்தல்,

பொதுமக்கள் வருமானத்தை ஈட்டும் பொருட்டு மீன் குஞ்சுகளை நன்னீர் குளங்களில் விடுதல், கூட்டுறவு திணைக்களத்தின் கீழ் உள்ள வவுனியா வடக்கு மற்றும் செட்டிகுளத்தில் அமைக்கபட்டு இயங்காத நிலையில் உள்ள ஆலைகளை இயங்க வைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வது,

மற்றும் மாவட்டத்தில் தற்போது தேவையாகவுள்ள 8 ஆயிரம் வீடுகளினை பெற்றுக்கொள்ளல் போன்ற பல்வேறு விடயங்கள் பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச அதிபரால் முன்வைக்கப்பட்டிருந்தன. இவற்றிற்கான திட்ட முன் மொழிவுகளை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்னர் உத்தியோக பூர்வமாக வழங்குமாறு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் போது அந்தந்த அமைச்சுகளினூடாக அவற்றை சமர்பிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.