தை1 ஆம் நாள்”தமிழ் மரபுத் திங்கள்” – முன்மொழிவு

உலகத் தமிழர் மரபு உரிமை பேணும் செயற்தடத்தில், நோர்வே வாழ் தமிழர்களாகிய  நாமும் இணைந்து, எமது அடையாளங்களைப் பேணி வாழ்வதற்கு தை மாதத்தை “தமிழ் மரபுத் திங்கள்”  என 2021 ஆம் ஆண்டு,  திருவள்ளுவர் ஆண்டு 2052  இல் நடைமுறைப்படுத்துவதென்ற செயற்திட்டத்தை நோர்வே ஈழத்தமிழர் மக்களவை முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பில் நோர்வே ஈழத்தமிழர் அவை விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தை 1 ஆம் நாள் “தமிழ் மரபுத் திங்களாக”  நோர்வேயில் பிரகடனப்படுத்த  நோர்வேயில் அரசுடனும், நோர்வேயில் இயங்கும் அனைத்துத் தமிழ்ச் சமூக நிறுவனங்களுடனும்,  மக்களுடனும் தொடர்ந்து வரும் மாதங்களில் தொடர்புகளை ஏற்படுத்தி கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளோம்.  எமது இந்த முயற்சிக்கு அனைத்து தமிழர் சமூக  நிறுவனங்களும், மக்களும் எம்முடன் இணைந்து செயற்படுவதற்கு அழைக்கின்றோம்.

நோக்கம்:

தமிழர்களின் புத்தாண்டு தை முதல் நாளே என தமிழ்ப் பேரறிஞர்களின் ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டு அதுவே தமிழர்களுக்கான திருநாள், அதாவது  தை1 ஆம் நாள் “தமிழர் திருநாள்” என்ற கருதுகோளுடன் முன்னெடுக்கப்பட்டு தமிழர் வாழும் நாடு தோறும் கொண்டாடப்பட்டு வளர்ச்சி அடைந்து வருகின்றது.

தமிழ் மரபுத் திங்கள் என்பது நம் அடையாளங்களைப் பேணவும் கால காலமாகத்  தொடரும்  தமிழரின்பழைமை,  செழுமை,  நாகரீகம்,  தமிழ்மொழி,  தமிழர்வரலாறு,  தமிழர்கலை, தமிழர்பண்பாடு, தமிழர்உணவு, தமிழர் இலக்கியம்,  மாண்பு என்பனவற்றை வருங்காலத் தலைமுறைகளுக்கு  ஊட்டிவளர்ப்பதற்கும், பல்லினப்பண்பாட்டுச் சூழலில் நாம் எமது மரபுகளைப் பேணி வாழ்வதற்கும்,  நாம் ஒரு நீண்ட நெடிய நாகரிகமுடைய தமிழ்த்தேசிய இனம் என்பதை நிலை நிறுத்துவதற்கும், நோர்வேஅரசு தை1 ம் நாளை; தமிழ் மரபுத் திங்களாக அங்கீகரிக்க வேண்டுவதற்கும் தமிழர் மரபுத் திங்கள் எனும் பிரகடனம் அவசியமாகின்றது.

எனவே 2020 ம் ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு 2051 தை1 ஆம் நாள் தமிழர் திருநாளாம், தைப்பொங்கல் நாளாகிய இன்று இவ் நற்செய்தியை வெளிப்படுத்துவதில் நிறைவடைகின்றோம்.  தை முதலாம் நாள் தமிழ் மரபுத் திங்கள் என பிரகடனப்படுத்திச்  செயற்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட தோழமையுடன் அழைக்கின்றோம்.

நோர்வே ஈழத்தமிழர் அவை

-- 
Regards