தேர்தல் விதிமுறைகளை மீறிய 6 வேட்பாளர்கள் கைது

தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை ஆறு வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் சட்ட மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரிவுபடுத்த பொலிஸார் முடிவு செய்துள்ளனர் எனத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜேசூரிய குறிப்பிட்டார்.

இதற்காக, மேலும் பொலிஸ் அதிகாரிகள் ஒதுக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர் கூறினார். தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில், இதுவரை 6 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறிய அவர், நேற்று முன் தினம் இரண்டு வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.

தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட 20 பேரையும் சேர்த்து, நேற்று காலை வரை 257 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜேசூரிய கூறினார்.