தெரிவுக்குழுவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை- சுமந்திரன்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்று குறித்த தெரிவுக்குழுவின் உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேற்படி தெரிவுக்குழுவை இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளமை குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் தீர்மானம் எடுப்பது பாராளுமன்றத்தின் வேலை. அது நிறைவேற்று அதிகாரத்தின் வேலையல்ல. எனக்குத் தெரிந்தவரை தெரிவுக்குழுவின் செயற்பாடு தொடரும்”என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.