திறந்த மனதுடன் பேச வாருங்கள் : முஸ்லீம்களுக்கு உருத்திரகுமாரன் அழைப்பு !

சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு, திறந்த மனதுடன் பேச வாருமாறு முஸ்லிம் தலைமைகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

சமீபத்தில் நடந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் போதே இந்த அழைப்பினை அவர் விடுத்துள்ளார்.

ஈழ விடுதலைப் போராட்டத்தின்போது ஜிகாத் அல் அமஜத், ஊர்காவல் படை போன்றவற்றின் வகிபாகத்தையும், தென் தமீழத்தில் தமிழ்க் கிராமங்கள், முஸ்லீம் கிராமங்களாக மாற்றப்பட்ட வரலாற்றையும் தாம் கவனத்தில் வைத்திருப்பதாக தெரிவித்த பிரதமர் வி.உருத்திரகுமாரன்,  முஸ்லீம் மக்களது உரிமைகளையும், நலங்கள் தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார சபை வரைவிலும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முரசறையப்பட்ட தமிழீழ விடுதலைச் சாசனத்திலும், முஸ்லீம்களின் தனித்துவத்தை பேணும் வகையில் அவர்களுக்கான உரிமைகள் மற்றும் நலன்கள் தெளிவாக உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமகாலத்தில் முஸ்லீம் சமூகத்துக்கு எதிரான சிங்கள பேரினவாத அரசின் விவகாரத்தில், அதற்கு எதிராக போராடுவதற்கு திறந்த மனதுடன் பேச வருமாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.