திருமலையில் இடம்பெறும் இலங்கை அரசின் அடக்குமுறைகளை கேட்பதற்கு எந்த தமிழ் நாடளுமன்ற உறுப்பினர்களும் முன்வருவதில்லை, அங்கு வாழும் தமிழ் மக்கள் அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர் என நேற்று (21) இரவு திருமலை மாவட்டம் அன்புவழிபுரத்தில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் தமிழரசுக்கட்சியுடன் இடம்பெற்ற கூட்டத்தில் பேசும் போது அதன் உறுப்பினர் துஷாந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இங்கு இலங்கை அரசின் நில ஆக்கிரமிப்பு, கைது செய்தல், துன்புறுத்தல்கள் என்பன அதிகரித்து வருகின்றது. தினமும் காலையில் இருந்து மாலை வரை பெருமளவான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம். இந்த பிரச்சனைகளினால் பாதிக்கப்படும் மக்களுக்கு குரல் கொடுப்பதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் களத்திற்கு வருவதில்லை.
இங்கு நடைபெறும் அரசியல் கூட்டங்களிலும் கலந்து கொள்வதில்லை. அம்பாறை மாவட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு நாள் கூட திருமலைக்கு வந்ததில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வருவதக கூறும்போதும் அவர் ஒரு சட்டவாளராக தான் வருகின்றார் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை.
அரசியல் என்பது பகுதி நேர தொழில் அல்ல, முழு நேரமாக நாம் களத்தில் நிற்க வேண்டும். இளைய சமூதாயத்திற்கு வழிவிட்டு வயதானவர்கள் அவர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் அப்போது தான் எமது பிரச்சனைகளை அடுத்த சமூகத்திற்கு கொண்டு செல்ல முடியும் என தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் அதன் செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோர் உட்பட பல உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் எதிர்வரும் 1 ஆம் நாள் திருமலையில் கூடும் என மவை சேனாதிராஜா இந்த கூட்டத்தின் முடிவில் தெரிவித்துள்ளார்.
அவர் பேசிய காணோளியை நீங்கள் கீழே பார்க்கலாம்;