தலைமையுடன் பேசத் தயார்; ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும்; மணிவண்ணன்

“பொதுத் தேர்தலிலே எனக்கு எதிராக சதி செய்யப்பட்டமை தொடர்பில் கட்சியின் தலைமையிடம் வெளிப்படுத்தியிருந்தேன். அது தொடர்பில் தலைமையுடன் பேசுவதற்கு தயாராகவே உள்ளேன். அதனால் ஆதரவாளர்கள் அமைதி காக்கவேண்டும்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் கேட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்றிரவு ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

“நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எனக்கு எதிராக சதித் திட்டம் செய்யப்பட்டது. அது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நேரில் எடுத்துக் கூறியிருந்தேன்.

இந்த நிலையிலேயே என்னை கட்சியின் தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை கட்சியின் மத்திய குழு எடுத்துள்ளது என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அதுதொடர்பில் கட்சியின் தலைமையினால் எனக்கு எந்தவொரு அறிவிப்பும் விடுக்கப்படவில்லை.

கட்சியின் ஒற்றுமைக்காக தலைமையுடன் பேச்சு நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன். அதனால் ஆதரவாளர்கள் அனைவரும் அமைதி காக்கவேண்டும் என்று வேண்டுகின்றேன்.”