தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களை செய்த படையினரை விடுவிப்பதில் ரணில் அரசு தீவிரம்

விசுவமடுவில் இராணுவ கூட்டுவன்புணர்வு வழக்கில், நீதிபதி இளஞ்செழியனால் தண்டனை வழங்கப்பட்ட சிறீலங்கா இராணுவத்தினரை சிறீலங்கா மேல்முறையீட்டு மன்று நேற்று விடுதலை செய்துள்ளது. ரணில் மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசின் தமிழ் மக்களுக்கு எதிரான அடுத்த வன்முறை இதுவாகும்.

கிளிநொச்சி, விசுவமடுவில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் பிரதிவாதிகள் மூவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் 2015 ஆம் ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்திருந்தது.

2010 ஆம் ஆண்டின் ஜூலை மாதமளவில் விசுவமடு பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயான 28 வயதுப் பெண்ணை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நான்கு இராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் பிரதிவாதிகளான 3 இராணுவ வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமானதை அடுத்து, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் குற்றவாளிகளுக்கான தண்டனைகளை அறிவித்தார்.

இதற்கமைய, இரண்டு குற்றவாளிகளுக்கு தலா 20 வருட கடூழிய சிறைத்தண்டனையுடன் 25 ஆயிரம் ரூபா வீதம் அபராதமும் விதிக்கப்பட்டது.

அபராதத் தொகையை செலுத்துவதற்கு தவறும்பட்சத்தில் தலா இரண்டு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலா ஐந்து இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறும் தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன், அபராதத் தொகையை செலுத்துவதற்குத் தவறும் பட்சத்தில் தலா இரண்டு வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் அறிவித்தார்.

மூன்றாவது குற்றவாளிக்கு ஐந்தாண்டு கடூழிய சிறைத்தண்டனையுடம் பத்தாயிரம் ரூபா அபராதமும் ஒரு இலட்சம் ரூபா நட்டஈடும் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது.

அபராதத் தொகையை செலுத்துவதற்குத் தவறினால், மேலும் ஒரு வருட சிறைத்தண்டனையும், நட்ட ஈட்டை செலுத்துவதற்கு தவறும்பட்சத்தில் ஒரு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் எனவும் யாழ். மேல் நீதிமன்றம்
தீர்ப்பளித்திருந்தது.

இந்த வழக்கின் மற்றுமொரு பிரதிவாதியான இராணுவ வீரர் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமையினால் அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி மா. இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.