தமிழர் நலன்சார்ந்து செயற்பட முடியாத நிலையில் அரசின் அங்கமாகஇருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு – சுரேஷ் பிரேமச்சந்திரன்

உயிர்த்த ஞாயிறு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அரசு கவுழும் நிலை ஏற்படும். அவ்வாறான நிலை ஏற்படுகின்றபோது தமிழ் மக்கள் நலன்களை மறந்து அரசை தாங்கிப்பிடிக்க கூடியவர்களாக கூட்டமைப்பு இருக்கின்றது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் இலக்கு வாரஇதழுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு.

கேள்வி:- அவசரகால நிலைமைகள் அமுலாக்கப்பட்டதன் பின்னர் தமிழர் தாயகத்தின் நிலைமை என்ன?

பதில்:- ஏற்கனவே தமிழர் தாயகம் இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் உள்ளாக்கப் பட்டிருக் கின்றது. ஆனாலும்கூட இராணுவம் முகாம்களுக்குள் முடங்கியிருந்தது. ஆனால் இப்பொழுது வடக்கு-கிழக்குப் பிரதேசங்களின் பல பகுதிகளில் இராணுவ சோதனைச் சாவடிகளும் இராணுவ சுற்றி வளைப்புகளும் கைதுகளும் ஆரம்பித்துள்ளன. குறிப்பாக வடக்கு மாகாணம் என்பது யுத்தத்திற்குப் பின்னர் மிகவும் அமைதியான பிரதேசமாக இருந்து வந்தது. அத்தகைய வடக்கு மாகாணம் இன்று ஏதோ ஒரு யுத்தப் பிரதேசம் போன்று காட்சி அளிப்பதுடன் மக்களும் அச்சநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் அவசரகாலச் சட்டத்தின் கீழும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனைப்போன்றே சில வியாபாரிகளும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். வயதான பிரயாணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட தொடர்ச்சியாக பிரயாணம் செய்வோர் பல்வேறு சோதனைச் சாவடிகளில் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். வடக்கு-கிழக்கிலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை முன்வைத்திருக்கும் சமயத்தில் இராணுவம் இதனை தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி வருகிறது. ஆகவே இந்த அவசரகால நிலை என்பது தமிழ் மக்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த சனநாயகத்தையும் கேள்விக்குட்படுத்தும் நிலையைத் தோற்றுவித்துள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற வான் ஒன்றில் பயணித்த பயணிகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் ஆத்திரமடைந்த காவல் துறையினர் வானில் தாங்களே சில பொருட்களை வைத்துவிட்டு வானில் வந்தவர்களைக் கைது செய்ததாகவும் பின்னர் காவல் துறையினரின் திட்டமிட்ட செயல் அம்பலமானதும் வேறு வழியின்றி அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதன் மூலம் அவசரகாலச் சட்டத்தின்கீழ் அமைதியாக இருக்கும் தமிழர்கள் திட்டமிட்டு சீண்டப்படுவது நிரூபணமாகிறது.

கேள்வி:- ஐ.எஸ் தாக்குதலின் பின்னர் இலங்கையில் இனமுறுகலை ஏற்படுத்தும் வகையிலான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமையின் பின்னணி என்னவாக உள்ளது?

பதில்:- உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் நடைபெற்ற தொடர் தற்கொலைக் குண்டு தாக்குதல் என்பது மிகப் பயங்கரமானது என்பதும் அது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் என்பதிலும் எமக்குக் கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால் இந்த சம்பவம் நடைபெறுவதற்குப் பல வருடங்களுக்கு முன்பாகவே இலங்கையில் இருக்கும் சில முஸ்லிம் நபர்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெறுவதாகவும் இலங்கையில் முஸ்லிம் அடிப்படை வாதத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதற்காக முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரச்சாரங்கள் மூலம் மூளைச்சலவை செய்யப்படுவதாகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் ஊடக வெளியில் பேசப்பட்டு வந்திருக்கின்றது.

அது மாத்திரமல்லாமல், முக்கியமாக முஸ்லிம் மதத் தலைவர்கள் இதுதொடர்பாக முன்னைய பாதுகாப்புச் செயலாளர் உட்பட பாதுகாப்புப் பிரதானிகளுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாகவும் சொல்கின்றனர். ஆனால் உரிய தரப்பினரால் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதற்குப் பின்னர், புத்தளம் வனாத்தவில்லு பிரதேசத்தில் ஆயுதங்களுடன் முஸ்லிம் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். அதுதொடர்பான தொடர் விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவில்லை. பின்னர் வவுணதீவில் சோதனைச் சாவடியில் காவலில் இருந்த இரண்டு காவல் துறையினர் கழுத்துவெட்டி கொலை செய்யப்பட்டனர். அப்பொழுதும் ஒழுங்கான விசாரணை மேற்கொள்ளப்படாமல் அதனை திசை திருப்பும் நோக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட அப்பாவியொருவர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் காவலில் வைக்கப்பட்டார்.

இரண்டு காவல் துறையினர்  கொல்லப்பட்டபோதுகூட உண்மையைக் கண்டறிவதில் பாதுகாப்புப் பிரிவினர் அக்கறை செலுத்தியதாகத் தெரியவில்லை. இதற்குப் பின்னர், காத்தான்குடியில் ஒரு மோட்டார் சைக்கிளில் குண்டுவைத்து வெடிக்க வைக்கப்பட்டது. அதனையும்கூட காவல் துறையினரோ  அல்லது புலனாய்வுப் பிரிவினரோ கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இப்பொழுது அரச தரப்பிலிருந்து இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருக்கின்ற 26 முஸ்லிம்கள் ஐஎஸ் ஐஎஸ்சில் இணைந்து அவர்களுக்கான பணிகளை மேற்கொண்டதாகவும் அவர்களுக்கான ஊதியம் இலங்கை இராணுவத்தினரிமிருந்து இன்றுவரை சென்றுகொண்டிருப்பதாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறுகின்றார்.

இறுதியாக இத்தகைய ஒரு தாக்குதல் நடைபெறப்போகிறது என்பதை இந்தியப் புலனாய்வுத்துறை இலங்கைக்கு அறிவித்திருந்தது. அந்த அறிவித்தலும் கண்டுகொள்ளப்படவில்லை. அதற்குப் பின்னரே கடந்த 21ஆம் திகதிய உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. ஆகவே, தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்தும் அரசும் புலனாய்வுப் பிரிவினரும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? இதன் உள்நோக்கம் என்ன?

மிக நீண்டகாலமாக ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு தொடர்பாக பல தகவல்கள் கிடைத்தும் அவை எதுவும் கையாளப்படாமல் அத்தீவிரவாத அமைப்பு தன்னை பாரிய அளவில் வளர்த்துக்கொள்ள இலங்கை பாதுகாப்புத்துறையினர் ஊக்கமளித்துள்ளனர் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. நிச்சயமாக ஒரு அரசியல் தேவை கருதி ஓர் அரசியல் பின்னணி ஊடாகவே இது நடைபெற்றிருக்க முடியும். முன்னைய அரசாங்கத்திற்கும் இன்றைய அரசாங்கத்திற்கும் இதில் பங்கிருப்பது மிகவும் வெளிப்படையாகத் தெரிகின்றது. இவை ஒருபுறமிருக்க, உயிர்த்த ஞாயிறன்று குண்டுத்தாக்குதல்கள் நடைபெற்றது.

நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். ஆனாலும்கூட மதத் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, மறுதாக்குதல்களோ கலவரங்களோ நடைபெறவில்லை. ஆனால் மூன்றுவாரம் கழித்து முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதும் வர்த்தக நிலையங்கள் மீதும் வீடுகள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவை பிற இடங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட குண்டர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது. இவை ஒரு திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. நிச்சயமாக ஒரு அரசியல் தேவை கருதியே இத்தகைய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான இன முறுகல் இன முரண்பாடுகளை அதிகரிப்பதினூடாக சிங்கள பௌத்த வாக்கு வங்கியை முழுமையாக எடுத்துக்கொள்ள முடியும் என்று நம்புபவர்களே இவ்வாறான தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பதாகவும் ஊடகவியலாளர்களினூடாக அறியக்கூடியதாக உள்ளது.

கேள்வி:- உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அமைச்சர் ரிசாட், ஆளந ர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லா போன்றவர்கள் மீது குற்றச்சாட்டு க்கள் மேலெழுந்துள்ள நிலையில் அதுபற்றி கட்சித்தலைவர் என்ற அடிப்படையில் உங்களின் கருத்து என்ன?

பதில்:- ஹிஸ்புல்லா அசாத்சாலி போன்றவர்களை ஆளுநர்களாக சனாதிபதி முஸ்லிம் வாக்குவங்கியைக் கைப்பற்றுவதற்காகவே நியமித்துள்ளார். அதேபோன்று ரிசாட் பதியுதீனை அமைச்சராக்குவதன் மூலம் ஐ.தே.க. தனது முஸ்லிம் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கும் தனது தற்போதைய அரசாங்கத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்கும் இவர்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இவர்கள் தொடர்பாக இப்பொழுது பாரிய குற்றச்சாட்டுக்கள் மக்கள் மத்தியிலிருந்து எழுந்துள்ளது. இவர்கள் அரசியலுக்கு வரும்பொழுது, சாதாரணமானவர்களாகவே வந்தார்கள். இவர்கள் இலட்சாதிபதிகளாகவோ கோடீஸ்வரர்களாகவோ இருக்கவில்லை. ஆனால் இன்று தொழிற்சாலைகள், தனியார் பல்கலைக்கழகங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் என பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதிகளாக இவர்கள் மாறியுள்ளனர். இவ்வளவு பெரும்தொகை நிதி இவர்களுக்கு எவ்வாறு கிடைத்தது? ஒன்றில் இவர்கள் அமைச்சர்களாக இருந்தபொழுது பாரிய அளவு ஊழல் செய்திருக்க வேண்டும் அன்றேல் இவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான நிதி கிடைத்திருக்க வேண்டும்.

இவர்கள் தமது அரசியல் பலத்தை எவ்வாறு துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதை ஹிஸ்புல்லா பல இடங்களில் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார். அதனை சமூக வலைதளங்களில் காணக்கூடியதாக உள்ளது. இவர்களது அரசியல் அதிகாரத்தினூடாக தமிழ் மக்களுக்கு அல்லது சைவ கோயில்களுக்கு உரித்தான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டன. தமிழ் மக்கள் இவர்களால் அனைத்துத் துறையிலும் புறக்கணிக்கப்பட்டனர். இவற்றிற்கு மேலாக பல குற்றச்சாட்டுகளும் மக்களால் சுமத்தப்பட்டுள்ளன. இன்னும் ஒரு படிமேல் சென்று வடக்கு-கிழக்கு இணைக்கப்பட்டால் இரத்த ஆறு ஓடுமென்றும் அமைச்சுப் பதவியைத் துறந்தேனும் வடக்கு-கிழக்கு இணைப்பைத் தடுத்து நிறுத்துவேன் என்று ஆளுநர் ஹிஸ்புல்லாவும் ரிசாட்டும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆளுநர்களுக்கும், அமைச்சருக்கும் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட அடிப்படைவாதிகளுக்குமிடையில் தொடர்புகள் இருப்பதாகவும் அவர்களைப் பாதுகாப்பதில் இவர்கள் ஈடுபட்டு வந்ததாகவும் பல தரப்பிலிருந்தும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றது. இவ்வாறான ஒரு சூழலில் இவர்களை இவர்களது பதவிகளிலிருந்து இடைநிறுத்தி இவை தொடர்பான ஒரு முழுமையான விசாரணையை நடத்தி மக்களுக்கு உண்மை நிலையை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். ஆனால் அந்த நிலைப்பாட்டை சனாதிபதியோ பிரதமரோ எடுப்பதாகத் தெரியவில்லை.

எதிர்கால அரசியலே அவர்களது இலக்காக உள்ளது. குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதிகள் இழுத்து மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை மீண்டெழுவதற்கு இன்னும் பல ஆண்டு ஆகலாம் என்று எதிர்வு கூறப்படுகிறது. இந்த குண்டுத்தாக்குதல்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில்கூட சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் வகையில் விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை என்பதும் குறுகிய அரசியல் இலாபமே இவர்களது முதன்மையான விடயமாக இருப்பதையும் நாம் வெளிப்படையாகக் காணக்கூடியதாக உள்ளது.

கேள்வி:- ஆளும் தரப்பு பிரதிநிதிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப் பட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற அச்சம் காணப்படுகின்ற நிலையில் தமிழர் தரப்பு இதனை எவ்வாறு கையாள வேண்டும் என்று கருதுகின் றீர்கள்? 

பதில்:- தமிழர் தரப்பாக இன்று பாராளுமன்றத்தில் செயற்படக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பிரிவாகவும் அரசுக்கு ஆதரவளிக்கும் ஒரு குழுவாகவுமே செயற்பட்டு வருகின்றது. இது தமிழரசுக் கட்சியாக இருந்தாலும் சரி ரெலோவாக இருந்தாலும் சரி புளொட்டாக இருந்தாலும் சரி இறுதியாக இவர்களது கூட்டு முடிவென்பது அரசைப் பாதுகாக்கும் ஒரு விடயமாகவே இருக்கின்றது. ஆகவே இப்பொழுதுகூட ரிசாட்பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மாறுபட்ட கருத்தினையே தெரிவித்து வருகின்றனர். தமிழ் மக்களின் நலன்களிலிருந்து இன்றும்கூட அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு வக்கற்றவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருப்பதென்பதும் ஒரு வருந்தத்தக்க செயலாக இருக்கின்றது. ஆளும் தரப்புப் பிரதிநிதியின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் ஆட்சி கவிழும்நிலை ஏற்பட்டால் அதனைத் தாங்கிப் பிடிக்கக்கூடியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. இத்தகைய ஒரு சூழ்நிலையில் தமிழ் மக்களின் குறைந்த பட்ச கோரிக்கைகள் பலவற்றை இவர்களால் நிறைவேற்ற முடியும். ஆனால் இவை தொடர்பாக அரசுடன் பேசி அவ்வாறான விடயங்களை கையாள்வதற்குப் பதிலாக கண்மூடித்தனமாக அரசாங்கத்தைப் பாதுகாப்பது ஒன்றே இவர்களது ஒரே கடமையாக இவர்களது செயற்பாடுகள் அமைந்திருப்பது அருவருக்கத்தக்கதாக இருக்கின்றது.

கேள்வி:-இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகளை எப்படிப்பார்க் கின்றீர்கள்? அடுத்த கட்டம் இந்தியத் தரப்பினை தமிழ்த் தலைமைகள் எவ்வாறு அணுக வேண்டும் என்று கருதுகின்றீர்கள்?

பதில்:- இந்தியாவில் பா.ஜ.கவும் தமிழகத்தில் தி.மு.கவும் பெருவெற்றி பெற்றுள்ளன. இந்திய மக்களின் ஆணை பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் எதிர்பார்ப் புக்களுடன் வழங்கப்பட்டிருகின்றது. அவ்வாறிருக்க, எம்மைப்பொறுத்த வரையில், தமிழர் பிரச்சினையினை தீர்ப்பதற்கு பல்வேறு அணுகுமுறைகள் காணப்படு கின்றன. அதில்மிக முக்கியமானதொரு விடயமாகவே அயல் நாடான இந்தியாவுடனான அணுகுமுறையை கொள்ளவேண்டியுள்ளது.

இலங்கையில் மஹிந்த, மைத்திரி, ரணில் இப்படி யார் ஆட்சிப்பீடத்திலிருந்தாலும் சீன சார்பான நிலைப்பாடொன்றே மையங்கொண்டுள்ளது. முதலீடுகளைச் செய்வதற்கு அனுமதிக்கின்றமை முதல், இறுதியாக செய்யப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் வரையில் கணிசமான இடைவெளிகளில் அந்நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. இதன்மூலம் ஆட்சியாளர்களின் போக்கினை தெளிவாக புரிந்துகொள்ள முடிகின்றது.

அப்படியிருக்கையில், அபிலாசைகளைப் பெறுவதற்கான உரிமைப்போராட்ட பயணத்தில் தமிழர்கள் தனியே சிங்கள ஆட்சியாளர்கள் மீதும், சர்வதேசத்தினையும் மட்டும் நம்பிக் கொண்டிருப்பது பொருத்தமற்ற செயற்பாடாகவே கொள்ளவேண்டியுள்ளது. அவர்களு டனான அணுகுமுறைகள் முன்னெடுக்கப்படுகின்ற அதேசமயத்தில் பிராந்திய ரீதியிலும், அயல் நாடு என்ற வகையிலும் இந்தியாவுடன் இறுக்கமான தொடர்புகளைப் பேண வேண்டியுள்ளது.

அண்மைக்காலமாக தமிழ் தலைவர்கள் மத்தியில் இந்திய மத்திய அரசுடன் மட்டுமல்ல, தமிழக தரப்புக்களுடனேயே தொடர்ச்சியான பிணைப்பொன்று இருப்பதை அவதானிக்க முடியவில்லை. இது மிகப்பெரும் வெற்றிடத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய நிலையில் தற்போது இந்திய மத்திய அரசு அறுதிப்பெரும்பான்மை பெற்று ஸ்திரமான ஆட்சியொன்றை கொண்டுள்ளது. ஆகவே கடந்தகாலத்தினை விடவும் தமிழர்களின் விடயத்தினை மிகவும் அவதானத்துடன் ஆழமாக அவர்கள் ஊடாக முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தொடர்ச்சியான அணுகு முறைகள் ஊடாக கொள்கைரீதியான மாற்றங்களை ஏற்படுத்தி எமது நியாயமான தீர்வினைப் பெறுவதற்குரிய நகர்வுகளைச் செய்ய வேண்டும்.பூகோள அரசியல் போக்கினை சரியாக புரிந்துகொண்டு இந்த நகர்வுகளைச் செய்தாக வேண்டியுள்ளது. ஆகவே தற்போது மீண்டும் ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அதனையாவது சரியாக பயன்படுத்திக்கொள்வதோடு தமிழக உறவுகளையும் புதுப்பித்துக்கொள்வது அவசியமாகின்றது.