தமிழரசு கட்சிக்குள் வெடித்தது பூகம்பம்? பெரும் தலைகளின் வெற்றிக்கு ஆப்பாகும் வியூகம்

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனுக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஆசனம் வழங்ககூடாது என சக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழரசு கட்சியின் தலைவரிடம் நேரில் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.

2010ம் ஆண்டு தேசிய பட்டியல் ஊடாக அரசியலுக்குள் நுழைந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் கட்சியை ஆட்டிப்படைப்பதா? என கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளதாகவும், பல வருடங்களாக மக்களுடன் இருந்து சேவையாற்றிய ஒருவருக்கு ஆசனம் கொடுக்க கூடாது என அவர் எப்படி கேட்க முடியும்? என ஆதரவாளர்கள் கேட்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற கட்சியின் யாழ். மாவட்ட கிளைக்குழு கூட்டத்திலும் இந்த விடயம் தொடர்பாக இரு உறுப்பினர்கள் பேசியிருப்பதுடன், கூட்டம் நிறைவடைந்த பின்னர் இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனுடன் கட்சி உறுப்பினர்கள் பலர் ஆதரவாக பேசியதாகவும் உள்வீட்டு தகவல்கள் கூறுகின்றன.

சுமந்திரன் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தாலும் வட்டுக்கோட்டைத் தொகுதிக்குரிய வேட்பாளர் யார் என்பதை வட்டுக்கோட்டைத் தொகுதிக்கிளையே தீர்மானிக்கும் அதனை சுமந்திரன் தனித்து தீா்மானிக்க முடியாது என்று பெய ர் குறிப்பிட விரும்பாத தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி முக்கியஸ்தர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

நேற்று இரவு இருபாலையில் உள்ள சரவணபவனின் வீட்டில் ஒன்று கூடிய ஆதரவாளர்கள் சுமந்திரன் கட்சித் தலைமை சொல்வதை மட்டுமே செய்ய வேண்டும் அல்லது கட்சிக் கட்டமைப்பில் உள்ளவர்கள் கூடி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

அதைவிடுத்து தான் சொல்கின்றவாறு கட்சித் தலைவர் செயற்பட வேண்டும் என்று சுமந்திரன் எதிா்பார்ப்பாரானால் நாம் அதனை வெறுமனே கைகட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று தீர்மானம் எடுத்து அதனை சரவணபவனுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கருத்து வெளியிட்டார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பத்து வருடங்கள் பதவி வகித்தவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்ற அடிப்படையில் சரவணபவனுக்கு ஆசனம் வழங்கப்படா விட்டால் வட்டுக்கோட்டைத் தொகுதி வேறுவிதமாக வியூகம் அமைக்கும் என்றும், அது தமிழரசுக்கட்சியின் பல பெரிய தலைகளின் வெற்றிக்கே ஆப்பாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.