தமிழகத்தில் இருந்து சட்டமுரணாக இலங்கை சென்ற அகதி கைது

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு சட்டமுரணாக சென்ற அகதியை பொலிஸார் கைது செய்து கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தியுள்ளனது.

இராமேஸ்வரம் ஈழத் தமிழர் அகதி முகாமில் இருந்தே குறித்த அகதி இலங்கைக்கு சென்றதாக கூறப்படுகின்றது. அதே நேரம்  யாழ்.கீரிமலையில்  வைத்து கைது செய்யப்பட்ட அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த நபர், இராமேஸ்வரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபா பணம் வழங்கி தலைமன்னார் கடற்கரையில் 2ஆம் திகதி அதிகாலை கரை இறங்கியுள்ளார். இவ்வாறு கரை இறங்கியவர் அங்கிருந்து மன்னார் நகரை அடைந்துள்ளார். மன்னாரில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளார்.

இவ்வாறு வாடகைக்கு அமர்த்திய முச்சக்கர வண்டிக்கு 8 ஆயிரம் ரூபா பணம் வழங்கி கீரிமலையில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு சென்றுள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தற்போது சகோதரியின் குடும்பமும் இந்தியாவில் இருந்து வருகை தந்த 28 வயது இளைஞரான ஜெகநாதன் -ஜெனன் ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.