தனியார் காணிகளை அபகரித்து, பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் அரசாங்கம்

தனியார் காணிகளை அபகரித்து, பாரிய அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் பிரதான நகரங்களான கொழும்பு, கண்டி,காலி, குருநாகல், இரத்தினபுரி மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களை உள்ளடக்கியதாக 25 பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த செயற்திட்டத்திற்கு தனியார் காணிகள் அபகரிக்கப்படவுள்ளதாகவும், அபகரிக்கப்படும் காணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இதற்கான சட்டமூலங்களை ஏற்கனவே கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தேவையான சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

மேலும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் பாரிய அபிவிருத்தித் திட்டங்களில் மெட்ரோ கொழும்பு நகர அபிவிருத்தி திட்டம், குருநாகலில் இருந்து ஹபரணை வழியாக தம்புள்ளை வரைக்குமான ரயில்பாதை திட்டம் என்பன பிரதானமாக இடம் பிடிக்கவுள்ளன.

அத்துடன் கண்டி காலி ஆகிய நகரங்களில் உலக வங்கியின் உதவியோடு மூலோபாய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அநுராதபுரம் நகரம் பிரான்ஸ் அபிவிருத்தி நிதியத்தின் உதவியோடு புதுப்பொலிவு பெற உள்ளது என்றும் கூறப்படுகின்றது.

திருகோணமலை, தம்புள்ளை, குருநாகல், இரத்தினபுரி ஆகிய நகரங்கள் அபிவிருத்தி வங்கியின் உதவியோடு அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.