தடுப்பூசி வழங்கலையும் அரசு அரசியல் மயப்படுத்திவிட்டது – அரசின் மீது சஜித் குற்றச்சாட்டு

“தடுப்பூசி செலுத்தும் செயற்பாட்டையும் இந்த அரசாங்கம் அரசியல் மயப்படுத்திவிட்டது” எனக் கடுமையாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “ராஜபக்ச அரசு கொரோனாத் தடுப்பூசியை ஒரு வியாபாரமாக்கியுள்ளது. தமது தரப்பில் உள்ளவர்களின் உயிரை மட்டுமே கருத்தில்கொண்டு அரசு செயற்பட்டு வருகின்றது” எனவும் சாடியிருக்கின்றார்.

சினோபார்ம் தடுப்பூசி கொள்வனவில் மோசடி இடம்பெற்றுள்ளது எனவும் அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“சினோபார்ம் தடுப்பூசி ஒன்றின் விலை 15 டொலர் (சுமார் 3,030 ரூபா) என்ற அடிப்படையில் 14 மில்லியன் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய அமைச்சரவையில் அனுமதி பெற்றுக் கொண்டுள்ள போதிலும், பங்களாதேஷ் குறித்த தடுப்பூசியை 10 டொலர்களுக்குப் பெற்று கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதன்படி குறித்த தடுப்பூசி கொள்வனவின்போது 140 மில்லியன் டொலர்கள் மோசடி இடம்பெற்றுள்ளது. இந்த 140 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு என்ன நடந்தது என்பது மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

நாட்டில் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பம் முதலே ஒழுங்காக முன்னெடுக்கப்படவில்லை. உலக சுகாதார நிறுவனம் கொடுத்துள்ள வழிகாட்டல்களுக்கு முரணாகவே தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

நாட்டில் 60 வீதமானவர்களுக்குக் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டுமானால் நாட்டுக்கு மொத்தமாக 30 மில்லியன் (3 கோடி ) கொரோனாத் தடுப்பூசிகள் தேவைப்படும் நிலையில், அரசு கடந்த 5 மாதங்களில் 2 மில்லியன் (20 இலட்சம்) தடுப்பூசிகளை மட்டுமே பெற்றுக் கொண்டுள்ளது. இதன்படி நாட்டுக்கு மேலும் 28 மில்லியன் (இரண்டு கோடி 80 இலட்சம்) தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவை உள்ளது.

இவ்வாறு கிடைக்கும் சிறிய அளவு தடுப்பூசிகளையும் அரசில் உள்ள சிலர் தமது பதவிப் பலத்தைப் பயன்படுத்தி தமக்குத் தேவையானவர்களுக்குப் பெற்றுக்கொடுத்துவரும் நிலையில் பொதுமக்களே தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைக்கு அமைய நாட்டு மக்களிடையே 10 வீதமானவர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்படும்போது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். எனினும், இலங்கையில் அந்தப் பரிந்துரை மீறப்பட்டுள்ளது.

இலங்கையில் இதற்கு முன்னர் தடுப்பூசி வழங்கும் திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்கள் இன்று நாடு முழுவதும் தடுப்பூசி தேடிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரியில் உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள தடுப்பூசி வழங்கும் கோட்பாடுகளை மீறி அரசு செயற்பட்டு வருகின்றது. மக்களின் உயிரை விசேடமானவர்கள் மற்றும் முக்கியமற்றவர்கள் எனத் தரம் பிரிக்க வேண்டாம்” எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.