ஜெனீவா தீர்மானத்தை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கின்றது: சுசில் பிரேம் ஜயந்த

இலங்கையின் இணை அனுசரணையுடன் ஐ. நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அரசு முற்றாக நிராகரிப்பதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமெரிக்காவுடன் இணைந்து இலங்கை ஐ. நாவில் சமர்ப்பித்த மேற்படி தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துக்களை ஏற்க முடியாதெனக் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், திருத்தமின்றி அந்தத் தீர்மானத்தை முழுமையாக அரசு நிராகரிப்பதாகவும் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த அரசு நீதித்துறையையும் பொலிஸ் துறையையும் எவ்வாறு நடத்தியுள்ளது. எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன என்பதைப் பார்க்கும்போது பெரும் கவலையாக உள்ளது. இதனால் நீதித்துறை பெரும் அபகீர்த்திக்கு உள்ளாகியுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மற்றுமொரு ஆணைக்குழுவை நியமிக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது. அதற்கான அவசியம் கிடையாது. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் பல விடயங்கள் வெளிவரவுள்ளன” என்றார்.