“ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் நாங்கள் அவசரபட போவதில்லை. சஜித், அனுரவிற்கு காலவகாசம் வழங்கியுள்ளோம்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
தலவத்துகொட பகுதியி இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
“புதிய செயற்திட்டத்துடன் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்தோம். பொய்யான குற்றச்சாட்டுகள் தற்போது வலுப்பெற்றுள்ளன. நாட்டுக்கு சேவையாற்றிய நபரை திருடர் என்று விமர்சிப்பது இயல்பாகியுள்ளது. நாட்டு மக்களின் அரசியல் சிந்தனைகளை திரிபுப்படுத்தும் வகையில் ஒரு தரப்பினர் செயற்படுகிறார்கள்.
உண்மையை மறைக்க முடியாது என்ற தொனிப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் அரசியல் கூட்டங்களை நடத்தவுள்ளோம்.
பொருளாதாரத்தை யார் இல்லாதொழித்தது, யார் நாட்டை அபிவிருத்தி செய்தது என்பதை வெகுவிரைவில் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவோம்.
நாட்டு மக்கள் மத்தியில் செல்வதற்கு எமக்கு பிரச்சினை ஏதுமில்லை. மக்கள் மத்தியில் ராஜபக்ஷர்களுக்கு இன்றும் நன்மதிப்பு உள்ளது. பெரும்பாலான மக்கள் ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை இன்றும் எதிர்பார்க்கிறார்கள்.
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை. கட்சியின் ஒருசில உறுப்பினர்களின் தனிப்பட்ட நிலைப்பாட்டை கட்சியின் நிலைப்பாடு என்று கருத முடியாது. ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் நாங்கள் அவசரபட போவதில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி பதவி தொடர்பில் கனவு காண்பதற்கு அவர்களுக்கு நாங்கள் காலவகாசம் வழங்கியுள்ளோம்” என்றார்.