‘ஜனாதிபதி பாலர் பாடசாலைக்குச் முதலில் செல்ல வேண்டும்’ -நாடாளுமன்றில் இரா.சாணக்கியன் உரை

மனித உரிமைகள் பற்றி கற்பதற்கு, சிறீலங்கா ஜனாதிபதி பாலர் பாடசாலைக்குச் முதலில் செல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று  உரையாற்றிய  அவர் “வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தினைப் பற்றிப் பேசும் பொழுது, இந்த சட்டத்திற்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டம் நடைபெற்று வருகின்றது.

இதனை இலங்கைக்கு எதிரான ஒரு மனித உரிமை ஆணைக்குழுவாக சிறீலங்கா மக்களுக்கு சித்தரிக்கப் பார்க்கின்றார்கள். நாங்கள் சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை நிறுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். மனித உரிமை என்பது தமிழ், சிங்கள, முஸ்லீம் ஆகிய அனைவருக்கும் உரித்தான ஒன்று.

 சிறீலங்காவில் தற்போதுள்ள பிரதம அமைச்சரே முதன் முதலாக மனித உரிமைக் குழு பற்றி எமக்கு கூறியவர். 2009 ம் ஆண்டு யுத்தம் நிறைவுற்ற போது ஏற்பட்ட மனித உரிமைகள் பற்றிய பிரச்சினைகள் இருக்கின்றன. அதற்கு மேலதிகமாக வெலிகடை சம்பவம், அண்மையில் ஏற்பட்ட மகர சிறைச்சாலை சம்பவம், ஜனாசா புதைத்தல் பற்றிய பிரச்சினை என்பன காணப்படுகின்றன.

இவ்வாறு மனித உரிமை என்ற விடயம் இல்லாமல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியுமென்று நான் நினைக்கவில்லை. சிறீலங்கா பொருளாதாரத்தில் மனித உரிமைகள் பின்னிப் பிணைந்ததொன்றாகக் காணப்படுகின்றன.

மேலும் எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் போது மேற்கத்தேய நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாவிடின் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது. ஜனநாயகம் இல்லாத நாட்டிலே பிள்ளை பெற்றெடுப்பதற்குக் கூட உரிமை இல்லை.

எமது நாட்டு மக்களுக்கு இவ்வாறு வாழ முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஜனாதிபதி அண்மையிலே  PhD பெற்றதாகவும், இரண்டாவது PhDயும் பெறப்போவதாகவும் கூறியிருந்தார். உண்மையில் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமென்றால் மனித உரிமைகள் பற்றி கற்பதற்கு ஜனாதிபதி பாலர் பாடசாலைக்குச் முதலில் செல்ல வேண்டும்.

PhDக்கு முன்னர் மனித உரிமை பற்றிய ஆரம்பப் பாடசாலைக்கு அவர் செல்ல வேண்டும். அன்று பிரதமர் அவர்கள் ஜனாசா அடக்கத்திற்கு அனுமதி கொடுப்பதாக கூறிவிட்டு பின்னர் இல்லையென மறுக்கின்றார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் மாகாண சபைத் தேர்தல் நடத்துவதாகவும் காணமலாகப்பட்டார்கள் இல்லையெனக் கூறிவிட்டு காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திக்கச் செல்கின்றார்கள். மனித உரிமைகளை முதலில் மதிக்க பழகிக் கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.