ஜனாதிபதி இம்மாத இறுதியில் டெல்லி பயணம் – புலனாய்வு உதவிகள் குறித்து ஆராய்வார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த மாத இறுதியில் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் எனவும் அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அல்கொய்டா, அபுசயாப் இயக்கங்களை சேர்ந்த பயங்கரவாதிகள் சமீப காலமாக இலங்கையை தங்கள் தளமாகப் பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர். அரபு நாடுகள் கிழக்கு, தெற்கு ஆபிரிக்க நாடுகள் ஆகியவற்றில் செயல்படும் இந்த பயங்கரவாதிகள் இலங்கையில் நடமாடுவது அதிகரித்துள்ளது.

மேலும் சர்வதேச போதைமருந்து கும்பலும் இலங்கையை போதைப்பொருட்கள் கடத்தும் மையமாக வைத்து இருக்க முயற்சிக்கிறார்கள். இதை முறியடிக்க இலங்கையில் போதிய படை பலம், புலனாய்வு அமைப்புகள் இல்லை. இதற்கு இந்தியா போன்ற பெரிய நாடுகளுடைய உதவி இருந்தால்தான் முடியும். அதிலும் பக்கத்து நாடான இந்தியாவால்தான் இதற்கு உதவ முடியும். எனவே, இதற்கான ஒத்துழைப்பை வழங்கும்படி இந்தியாவிடம் கேட்டுக் கொள்வதற்காக கோட்டாபய ராஜபக்ஷ இந்தியா வர உள்ளார் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.