செம்மணி மனித புதைக்குழியில் சாட்சியங்கள் அழிக்கப்படும் அபாயம் – எச்சரிக்கும் கஜேந்திரகுமார்

‘செம்மணி மனிதப் புதைகுழிக்குப் பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் சாட்சியங்கள் அழிக்கப்பட்டு, அநீதிகள் நடக்கக்கூடும்’ என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் நீதியமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘வடக்கு கிழக்கில் கொடிக்குத்தொடுவாய் மற்றும் மன்னாரில் பாலத்துக்கு அருகில் உள்ள சதொச தொகுதி ஆகிய இடங்களில் மனிதப்புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டன’.
‘தற்போது இரண்டு வாரங்களுக்கு முன்னர் யாழ். செம்மணியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டன’.
‘நாம் அங்கு சென்று பார்த்தபோது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையையும் மேற்கொண்டிருக்கவில்லை’. ‘நீதிமன்றுக்குத் தெரிவிக்கப்படவுமில்லை’ என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

‘இந்தநிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருகிறது’. ‘ஆனால் அங்கே புதைகுழிகள் தொடர்பான எந்த நெறிமுறையும் கடைப்பிடிக்கப்படுவதில்லை’ என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘இதற்கு நிதிப்பற்றாக்குறை காரணம் காட்டப்படுகிறது’. ‘இந்த விடயங்களை உடனடியாக கவனிக்க வேண்டும்’. ‘மன்னார், கொடிக்குத்தொடுவாய் ஆகிய இரண்டு இடங்களிலும் இழுபறி நிலையே காணப்படுகிறது’ என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
‘இதனால் யாழ்ப்பாணத்தில் செம்மணியிலும் ஆதாரங்கள் சிதைக்கப்பட்டு அழிக்கப்படலாமென அஞ்சுவதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் ‘குறித்த பகுதிக்குப் பாதுகாப்பு வழங்காமல் இருப்பதால், சாட்சியங்கள் அழிக்கப்பட்டு, அநீதிகள் நடக்கக்கூடும்’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.