சுனில் ரத்நாயக்கவுக்கு பொது மன்னிப்பு! எச்சரிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி

யாழ்ப்பாணம் மிருசுவிலில் படுகொலைக்காக குற்றவாளியாக அடையாளம்காணப்பட்டு நீதிமன்றினால் துாக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சார்ஜென்ட் சுனில் ரத்நாயக்க பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படுவது என்பது இனங்களுக்கு இடையில் குரோதங்களை தூண்டிவிடும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது போன்ற நடவடிக்கைகள் ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் பொலிஸார் தமிழ் மக்கள் மீது எந்தவித அச்சமும் இன்றி வன்முறைகளை பிரயோகிப்பதற்கு ஊக்குவிக்கும் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியிலிருந்து போர் காரணமாக இடம்பெயர்ந்து கரவெட்டி நாவலர்மடம் பகுதியில் வசித்து வந்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்ளிட்ட 9 பேர், தமது சொந்த வீடுகளைப் பார்ப்பதற்கு 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி சென்ற நிலையில் அவர்களில் 8 பேர் இராணுவத்தினரால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் காயமடைந்த நிலையில் அவர் வழங்கிய சாட்சியங்களுக்கு அமைய அந்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ சார்ஜன் தரத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உள்ளிட்ட எட்டு இராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களுக்கு எதிராக 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுடன் இராணுவ சார்ஜென்ட் சுனில் ரத்நாயவுக்கு தூக்குத் தண்டனையும் விதித்தது.

இதற்கு எதிராக சிங்கள பௌத்த பேரினவாத அமைப்புக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்திவந்திருந்த நிலையில், சுனில் ரத்நாயக்கக உட்பட ஆட்கடத்தல்கள், படுகொலைகள் உள்ளிட்ட பாரதூரமான குற்றச்செயல்களுக்காக கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள 34 இராணுவப் புலனாய்வாளர்களை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையை பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா வார இறுதியில் வரவேற்றும் இருந்தார்.

இந்த நிலையில் யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்தியிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், மனித படுகொலைகளுடன் தொடர்புடை இராணுவத்தினர் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுவதற்கு கண்டனம் வெளியிட்டார்.