சுதந்திரபுரம் பகுதியில் மேலும் மனித எச்சங்கள்

முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் உள்ள தோட்டக் காணியில் மனித எச்சம் அடையாளம் காணப்பட்ட நிலையில் அதனை மீட்கும் பணி மூன்றாவது நாளாகவும் இடம்பெற்ற போது அங்கிருந்து மேலும் சில மனித எச்சங்களும் மண்டை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த பகுதியில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினமும், நேற்றைய தினமும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் மண்டை ஓடும் மனித உடற்பாகங்களும் மீட்கப்பட்டன.

இப் பகுதியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட மண் கொட்டப்பட்ட பகுதியிலுள்ள மனித எச்சங்கள் விலங்குகள் மற்றும் மழை நீரினால் அடித்துச் செல்லப்படும் அபாயம் இருந்ததன்  காரணமாக உடனடியாக குறித்த மனித எச்சங்கள் இரண்டு நாட்களாக எடுக்கப்பட்டதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.