சீனாவிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இரத்து

சீனாவில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வருகை விசா நடைமுறை இன்று முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இன்று முதல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் பயணிகள் தவிர்ந்த எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் நோய் தாக்கத்திற்கு உள்ளான பெண்ணொருவர் நேற்று அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள அசாதாரண சுகாதார நிலை கட்டுப்பாட்டிற்குள் வரும் வரை இந்த நடைமுறைகள் அமுலில் இருக்கும் என சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவால் நியமிக்கப்பட்ட நிபுணர்களின் குழு மற்றும் குடிவரவு மற்றும் குடிவரவுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதிய நடைமுறையின்படி சீனர்கள் இலங்கை வருவதற்கான காரணங்கள், சீனாவில் அவர்களின் இருப்பிடங்கள் குறித்து கவனமான பரிசீலனைகளின் பின்னரே அவர்களுக்கு விசா வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.