சிறுபான்மையினக் கட்சிகள் எதிர்த்தாலும் தேர்தல் முறையை மாற்றுவோம்; எஸ்.பி.திசாநாயக்க

சிறுபான்மைக் கட்சிகளின் ஒத்துழைப்பின்றி 19 ஆவது அரசியல் அமைப்பை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.

சிறுபான்மைக் கட்சிகளைச் சார்ந்தவர்களே மாகாண சபைத் தேர்தல் முறையை பிரச்னையாக்கினர் எனவும் சிறுபான்மைக் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தும் கூச்சலிட்டும் எதிர்ப்பைத் தெரிவித்தாலும் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்படும் என்றும் எஸ்.பி.திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கொத்மலையில் நேற்றுச் சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“19 ஆவது திருத்தத்தின் ஊடாக நாட்டை பிரச்னைக்குள்ளாக்கினார்கள் என்பதை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவே ஏற்றுக்கொண்டார். சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. அவை வெறுமனே அரசியல் ரீதியான ஆணைக்குழுக்கள் மாத்திரமேயாகும். அப்போது பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட்டமையும் அரசியல் நோக்கம் கருதியதே. இவ்வாறான சிக்கல் நிறைந்த 19 ஆவது திருத்தம் நீக்கப்பட்டு 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்படும்.

உண்மையாகவே 19 ஆவது திருத்தத்தின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரியின் அதிகாரத்தைக் குறைத்து பிரதமர் ரணிலின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டது. 19 ஐ கொண்டுவர தனிப்பட்ட நோக்கமே காரணமாகும். ராஜபக்ஷக்களுக்கு எதிராகவே 19 இன் மூலம் இரட்டை குடியுரிமையாளர்கள் அரசியலில் ஈடுபடமுடியாது எனக் கூறப்பட்டது.

அது கோட்டாபய ராஜபக்ஷவை இலக்குவைத்து செய்யப்பட்டது. அதாவது, ராஜபக்ஷக்களுக்கு எதிராக செயற்படவும், மைத்திரியின் அதிகாரத்தைக் குறைத்து ரணில் பலம்பொருந்தியவராக மாறவுமே 19 ஆவது அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது. எனவே, அதனை ஒழித்து 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்படும். அதற்காகவே மக்கள் பெரும்பான்மை பலத்தை அரசாங்கத்திற்கு வழங்கினர்.

அதேபோன்று, புதிய தேர்தல் முறையொன்றை மக்கள் கோரியுள்ளனர். ஆகவே, ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பர். இதற்கு சிறுபான்மைக் கட்சிகள் எதிர்ப்பைத் தெரிவிக்கலாம். சிறுபான்மைக் கட்சிகளைச் சார்ந்தவர்களே மாகாண சபைத் தேர்தல் முறையையும் பிரச்னையாக்கினர். அதனால் சிறுபான்மைக் கட்சிகள் அதற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தும் கூச்சலிட்டும் எதிர்ப்பைத் தெரிவிக்கலாம். ஆனால், நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.