கிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பினால் மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி மட்டக்களப்பு காந்திபூங்கா வரையில் நடைபெற்றது.
இந்த பேரணியில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த காணாமல்போனவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.
இலங்கையின் சுதந்திர தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) ‘வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படும் நாட்டில் சுதந்திர தினம் எதற்கு என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி பதாகையை ஏற்தியவாறு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுதந்திர தினம் பெப்ரவரி 04 அது தமிழ் மக்களின் கரி நாள் போன்ற பதாகைகளையும் கறுப்புக்கொடிகளையும் ஏந்தியவாறு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.