சிறிகாந்தா தலைமையில் ´தமிழ் தேசியக் கட்சி´ உதயமானது

ரெலோ அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளரான சிறிகாந்தா தலைமையில் புதிய கட்சியொன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இக்கட்சிக்கு ´தமிழ் தேசியக் கட்சி´ எனப் பெயரிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள் கட்சி அலுவலகத்தில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது. தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக இந்த புதிய கட்சி உதயமாகியுள்ளதாக சிறிகாந்தா இன்று(15) அறிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, கட்சி விதிகளை மீறிச் செயற்பட்டதாகக் கூறி, ரெலோ அமைப்பிலிருந்து சிறிகாந்தா உள்ளிட்ட சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதன் பின்னரே சிறிகாந்தா தலைமையில் இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ரெலோவின் பிரதான தரப்பு, வேட்பாளர் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவளித்த அதே வேளை, ரெலோவின் யாழ். மாவட்டத்தின் சிறிகாந்தா உட்பட ஒரு தரப்பினர் தமிழ் வேட்பாளராக களமிறங்கிய எம்.கே.சிவாஜிலிங்கத்திற்க ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனால் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் சிறிகாந்தாவை விசாரணையின் பொருட்டு இடைநிறுத்தியிருந்த நிலையில், அவர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சியின் செயலாளராக எம்.கே.சிவாஜிலிங்கம், துணைத் தலைவராக சிரேஸ்ட சட்டத்தரணி சிவகுருநாதன், சட்டத்துறை செயலாளராக சட்டத்தரணி ஜெயகாந்தன், தேசிய அமைப்பாளராக சில்வெஸ்டர் விமல்ராஜ் ஆகியோரும், தெரிவு செய்யப்பட்டனர். இவை தவிர கல்வி, நிதி, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் செயலாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

அங்குரார்ப்பண நிகழ்வில் பேசிய சிறிகாந்தா குறிப்பிடும் போது,

தமிழினத்தின் போர் வாளாக, தமிழினத்தின் கேடயமாக இந்த அமைப்பு தன்னை அர்ப்பணிக்கின்றது எனவும், தமிழினம் தன்னைத் தானே ஆளவும் சுதந்திரத்தோடு வாழவும் விரும்புகின்றது என்பதை மனதில் பதித்து தமிழ்த் தேசியக் கட்சி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் முன்னாள் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வன் தலைமையிலான கூட்டணியில் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.