சிங்கள மக்கள் விரும்புகின்ற தீர்வையே கொடுப்போம்: சம்பந்தனுக்கு மஹிந்த பதில்

ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அரசியல் தீர்வுக்கான எமது பணிகள் ஆரம்பமாகும். அந்தத் தீர்வு சிங்கள மக்கள் விரும்புகின்ற தீர்வாகத் தான் இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு பதில் கொடுத்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ.

அதிகாரப் பகிர்வு குறித்து சிந்தித்தால் மட்டுமே அபிவிருத்தி சாத்தியமாகும். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்க வேண்டும். அப்போது தான் சர்வதேச முதலீடுகள், அபிவிருத்திகள் என அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கருத்துத்தெரிவிக்கையில் கூறியிருப்பதாவது:

“அதிகாரப் பகிர்வு குறித்து சிந்தித்தால் மட்டுமே அபிவிருத்தி சாத்தியமாகும் என்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தப்புக் கணக்குப் போடக்கூடாது. போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு அபிவிருத்திதான் மிகவும் அவசியம்.

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அரசியல் தீர்வுக்கான எமது பணிகள் ஆரம்பமாகும். மூவின மக்களுக்கும் சம உரிமையுடனான தீர்வை நாம் பெற்றுக் கொடுப்போம். அந்தத் தீர்வு சிங்கள மக்கள் விரும்புகின்ற தீர்வாக இருக்கும்.

ஏனெனில் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கி ரணில் தலைமையில் தலைவிரித்தாடிய ஊழல், மோசடி ஆட்சியை மாற்றியமைத்ததில் சிங்கள மக்களுக்குப் பெரும் பங்குண்டு. அதற்காக தமிழ், முஸ்லிம் மக்களை நாம் புறக்கணிக்க மாட்டோம். அவர்களையும் அரவணைத்துக் கொண்டு சிங்கள மக்கள் விரும்புகின்ற அரசியல் தீர்வை நாம் பெற்றுக்கொடுப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.