சட்டவிரோதமாக கடல் வழியாக வந்தவர்கள் வவுனியாவுக்கு நுளைந்தார்களா? பொலிஸ் எச்சரிக்கை

சட்டவிரோதமாக கடல்வழியாக நாட்டுக்குள் பிரவேசித்து வவுனியாவில் தங்கியுள்ளவர்கள் தொடர்பில் உடன் தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் இந்த வேண்டுகோளை விசேட சுவரொட்டிகள் மூலம் விடுத்துள்ளனர். காய்ச்சல் , வரட்டு இருமல் , சளி , மூச்சுத்திணறல் இருக்கும் நபர்கள் கொரோனா தொற்றுடையவர்களாக இருக்கலாம் எனவும் எனவே அவர்களிடமிருந்து அவதானமாக இருக்குமாறும் அந்தச் சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்கிடமான நபர்களை தங்கவைத்தல், பாதுகாப்பளித்தல், போக்குவரத்துக்காக உதவியளித்தல், மறைந்திருந்திருப்பதற்காக உதவி புரிதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே. இந்த விடயங்கள் தொடர்பாக தகவல் கிடைத்தால் உடனடியாகப் பொலிஸாருக்கு தெரிவித்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக 199 அல்லது 1933 அல்லது 011 2444480 அல்லது 011 2444481 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்துமாறும் அல்லது 071 – 8558875 என்ற வட்சப் இலக்கத்துக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறும் பொலிஸாரினால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சுவரொட்டிகள் வவுனியா நகர் , புதிய பேருந்து நிலையம் போன்ற பல பொது இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.