சஜித் கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம் சென்னையில் ரவூப் ஹக்கீம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாசாவின் கூட்டணியில் தாம் தொடர்ந்தும் நீடிப்போம் என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சென்னையில் தெரிவித்துள்ளார்.

நேற்று (01) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்த ரவுப் ஹக்கீமை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், சென்னை கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் ஆசாத், மாவட்ட சிறுபான்மை இணைச் செயலாளர் இப்ராஹிம் கனி, திருச்சி ஊடகவியலாளர் எம்.கே.ஷாகுல் ஹமீது ஆகியோர் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த ரவூப் ஹக்கீம், கருத்துத் தெரிவிக்கையில்,

துறைமுகம் எம்.எல்.ஏ சேகர் பாபு ஏற்பாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வருகை தந்தேன். இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து போராட்டம் நடைபெறுகின்றது. இந்தப் போராட்டம் மிகவும் கவலைக்குரியது. ஒரு சட்டமூலம் நிறைவேறி இருக்கின்றது என்பது தொடர்பாக தொப்புள்கொடி உறவுகளாக இலங்கையில் வாழ்ந்து வரும் நாங்களும் கவலை கொள்கிறோம். போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகின்றேன். என்று கூறினார்.

இலங்கையில் தேசிய கீதம் தமிழில் பாட தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்துக் கேட்ட ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கையில்,

ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது பிழையான தகவல். உத்தியோகபூர்வமான நிகழ்ச்சிகளில் சிங்கள மொழியில் பாடுவதுடன் தமிழ் மொழியிலும் தேசிய கீதம்பாடுவதை முந்தைய அரசு இருந்த காலகட்டத்தில் நாங்கள் வழமையாகக் கொண்டிருந்தோம். அந்த வழமையை இப்போதைய அரசு மாற்றி, சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கின்றது. நல்லிணக்கம் கருதி கொண்டு வரப்பட்ட அந்த வழமை தற்போது மாற்றப்பட்டுள்ளதால், அது தமிழர்களின் மனதைப் புண்படுத்தியிருக்கின்றது. அதுவே தற்போது இலங்கையில் சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து கொண்டிருக்கின்றது என்று கூறினார்.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக இதுவரை விசாரணை நடைபெறவில்லை என ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் கவலை தெரிவித்திருக்கின்றார். இனியேனும் அந்த விசாரணை நடைபெறுமா என்று கேட்டதற்கு,

இலங்கையில் தற்போது உள்ள அரசு ஐக்கிய நாடுகள் சபையுடன் கூட்டாக நிறைவேற்றிய பிரேரணையில் தமது இசைவைத் திரும்பப் பெற்றிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசு எடுத்து வரும் நல்லெண்ண நடவடிக்கைகளுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் நிலவுகின்றது. இலங்கையில் நடைபெற்ற போரின் போது போர்க் குற்றங்கள் நடைபெற்றனவா இல்லையா என்பதில் சர்வதேச அரசியல் தலையீடு எதுவும் இருக்கக்கூடாது என்பது தற்போது இலங்கையை ஆட்சி செய்பவர்களின் நெடுநாள் கொள்கையாக உள்ளது. எனவே இது குறித்து சர்ச்சை சர்வதேச அளவில் இன்னும் விரிவடையும் வாய்ப்பு இருக்கின்றது. என்று கூறினார்.

இலங்கையிலுள்ள கிறிஸ்தவ தேவாயத்தில் குண்டுத் தாக்குதல் நடைபெற்ற பின்னர் அங்கிருக்கும் முஸ்லிம்களுக்கான பாதுகாப்பில் பிரச்சினை நிலவியதே? அதன் தற்போதைய நிலை என்ன? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,

அந்தப் பதட்டம் தற்போது ஓரளவு தணிந்துள்ளது. இருந்தாலும், ஆத்திரமூட்டும் பேச்சுக்களைத் தொட்ந்து பொது வெளியில் சில அரசியல்வாதிகள் பேசிக் கொண்டிருப்பதால், அது மனங்களை வேறுபடுத்திக் கொண்டிருக்கின்றது. இந்த நிலை தொடராமல் இருக்க வேண்டும் என்பதே எமது அவா என்று கூறினார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தங்களின் தேர்தல் நிலைப்பாடு எப்படியிருக்கும்? என்ற கேள்விக்கு பதிலளிக்யைில்,

திங்கட்கிழமை நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படுகின்றது என்பது உறுதியான தகவல். கடந்த தேர்தலின் போது ஜனாதிபதி வேட்பாளராகக் களம் கண்ட சஜித் பிரேமதாசா தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து நாங்கள் களம் காண்கின்றோம். இக்கூட்டணி ஆளும் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்ற நிலையே தற்போது உள்ளது என்று ரவூக் ஹக்கீம் கூறினார்.