கோட்டாவின் சிம்மாசன உரையின் பின் மஹிந்தவுடன் பேசிய மாவை! நாளை நடக்கப்போவது என்ன?

நாடாளுமன்றத்தின் நாளைய கூட்டத்தில் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் விரிவாக கலந்துரையாட முடியும் என பிரதமர் தம்மிடம் தெரிவித்ததாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியதாக கூறினார்.

இது தொடர்பாக தாம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் நாளை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் மேற்படி விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாட முடியுமென தம்மிடம் பிரதமர் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சிம்மாசன உரையையடுத்து இடம்பெற்ற தேநீர் விருந்துபசாரத்தின் போதே மேற்படி கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றம் மற்றும் வீடமைப்பு உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் அதற்கான நிதி விடுவிக்கப்படவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் நாம் அது தொடர்பில் எமது முழுமையான கவனத்தை செலுத்தியுள்ளோம்.

மேலும் பலாலி விமான நிலையத்திற்கு கிழக்குப் பிரதேசம் மற்றும் மயிலிட்டி பகுதிகளில் இன்னும் 2500 குடும்பங்களை மீள் குடியேற்ற வேண்டியுள்ளது.

அத்துடன் ஏனைய பகுதிகளில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அம் மக்கள் வீடில்லாமலும் பல்வேறு அடிப்படை வசதிகளுக்காகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இத்தகைய பிரச்சினைகள் தொடர்பில் தாம் பிரதமருடன் கலந்துரையாடியதாகவும் அதனையடுத்து நேற்று முன்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கும் அது தொடர்பில் விளக்கியதாகவும் மாவை சேனாதிராஜா எம். பி. மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதம் நாளையும் நாளை மறுதினமும் நடைபெற உள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற இருப்பதாக அறிய வருகிறது.