கொழும்பிலிருந்து யாழ். வந்த ரி.ஐ.டி.யினர் மறவன்புலவு சச்சியிடம் 2 மணி நேர விசாரணை

சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனைக் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பயங்கரவாதத் தடைப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று மாலை இரண்டு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தினார்கள்.

தயாரித்துக் கொண்டு வந்திருந்த வினாக்கொத்து ஒன்றினைக் கொண்டு 22க்கும் கூடுதலான கேள்விகளை மறவன்புலவு சச்சிதானந்தத்திடம் தொடுத்தனர். அதற்கான பதில்களைப் பதிந்து சென்றுள்ளார்கள். இந்த விசாரணைகள் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு நீடித்தது.

சிவசேனை அமைப்புக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் அவர்கள் விசாரணை அமைந்தது. இதுவரை காலம் சிவசேனை வெளியிட்ட நூல்கள் தட்டிகள் சுவரொட்டிகள் யாவற்றையும் ஒவ்வொன்றாகக் காட்டிய மறவன்புலவு க சச்சிதானந்தன், ஒவ்வொரு படியை எடுத்துச் செல்லுமாறு அவர்களுக்குக் கொடுத்த போது அவற்றின் படங்கள் தம்மிடம் இருப்பதாக கூறி எடுத்துச்செல்ல மறுத்து விட்டனர்.

பசுவதைத் தடைச் சட்டக் கோரிக்கை தொடர்பாக இதுவரை சிவசேனை நடத்திய போராட்டங்கள் யாவற்றையும் விளக்கமாகக் கேட்டறிந்து கொண்டனர்.