கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 435 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனாவினால் மேலும் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இதுவரை இலங்கையில்  பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 435 ஆக உயர்வடைந்துள்ளது.

அவர்களில் ஒருவர் குருவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 66 வயதான ஆண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதன் பின்னர் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

சுவாச தொகுதி செயலிழந்தமை, குருதி விசமானமை, கொவிட் நிமோனியா மற்றும் புற்றுநோய் போன்ற நோய் நிலைமைகள் இவரது மரணத்துக்கான காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், திஹாரியவைச் சேர்ந்த 78 வயதான ஆணொருவர் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதன் பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்துக்கான காரணமாக கொவிட் நிமோனியா தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 543 பேருக்கு கொவிட் -19 தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்களுள் 528 பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன், எஞ்சிய 15 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 79 ஆயிரத்து 480 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 73 ஆயிரத்து 456 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 5 ஆயிரத்து 589 கொவிட் 19 நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.