கொரோனா தொற்று – அதிக மரணங்கள் கொழும்பில் பதிவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரையில் 34 மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த 34 மரணங்களில் கடந்த 8 நாட்களில்   14 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் உலக அளவிலான பாதிப்பு ஐந்து    கோடியே 68 ஆயிரத்து 493 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் மொத்த எண்ணிக்கை 12 இலட்சத்து 54 ஆயிரத்து 411ஆக அதிகரித்துள்ளதோடு இதுவரை மூன்று கோடியே 54 இலட்சத்து 80ஆயிரத்து 358 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளர் இனங்காணப்பட்டதிலிருந்து ஜூலை மாதத்தில் மட்டும் எந்த மரணமும் பதிவாகவில்லை என்று கூறப்படுகின்றது.

அதேநேரம், நாட்டில் அதிகளவில் ஆண்களே கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதுவரையில் 18 ஆண்களும் 16 பெண்களும் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தோர் 19 வயது தொடக்கம் 88 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாரவில, கொச்சிக்கடை, மருதானை, ஹோமாகம, தெஹிவளை, கல்கிசை, பொல்பிதிகம, முகத்துவாரம், திருகோணமலை, ஹோமாகம, மாவத்தகம, நுகேகொடை, குளியாபிட்டி, கொம்பனிவீதி, ஜாஎல, கொழும்பு, மஹர, கொட்டாஞ்சேனை, மாளிகாவத்தை, கனேமுல்ல மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளிலேயே இதுவரையில் மரணங்கள் பதிவாகியுள்ளன.

இலங்கையில் இது வரையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 415ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை ஏழாயிரத்து 723 பேர் இந்த தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 662 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.