கொரோனா தடுப்பு மருந்தை பணக்கார நாடுகள் பதுக்கி வைக்கும்

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் 44 ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆராய்ச்சியில் மூலக்கூறு மரபியலாளர் கேட் ப்ரோடெரிக் ஈடுபட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள உயிரி தொழில்நுட்ப நிறுவனமான இன்னோவியோவில் மருத்துவர் கேட் ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார்.

இந்நிறுவனம் டிசம்பர் மாதத்திற்குள் 10 லட்சம் தடுப்பு மருந்துகளைத் தயாரித்து உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த 10 லட்சம் டோஸ்களை எங்கு யார் பெற்றுக்கொள்வார்கள் யாருக்குக் கிடைக்கும்.

மருத்துவர் கேட்டின் சகோதரி பிரிட்டனில் செவிலியராக பணிபுரிகிறார். ”எனது சகோதரி தினமும் கோவிட் 19 வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் போராடி வருகிறார். அவர்கள் அனைவருக்கும் எப்படித் தடுப்பு மருந்துகளை அனுப்ப முடியும். இந்த தடுப்பு மருந்து இப்போதே தயாராக வேண்டும்” என்கிறார் கேட்.

ஆனால் இன்னோவியோ போன்ற நிறுவனம் உருவாக்கும் தீர்வுகளைப் பணக்கார நாடுகளால் “யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைக்கும்,” வாய்ப்புள்ளது என்ற கவலைகள் உள்ளன. அப்படி கவலையை வெளிப்படுத்தும் குரல்களில் ஒன்று தொற்று நோயியல் நிபுணர் சேத் பெர்க்லி என்பவரின் குரல்.

தடுப்பு மருந்து கிடைப்பதில் பாரபட்சமான இடைவெளி தோன்ற வாய்ப்புள்ளது என்கிறார் அவர்.

உலகின் 73 ஏழ்மையான நாடுகளில் நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் உலகளாவிய சுகாதார கூட்டமைப்பான ‘வேக்சின் அலையன்ஸ்’ (Gavi) என்ற அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அவர். உலக சுகாதார நிறுவனம் இந்த கூட்டமைப்பின் உறுப்பினர்களில் ஒன்று.

இவ்வாறான நெருக்கடி நிலையில் “செல்வந்த நாடுகளில் தடுப்பு மருந்து அவசியம் தேவைப்படும் மக்களுக்கு மட்டுமல்லாமல் ஏழை நாடுகளில் தடுப்பு மருந்து தேவைப்படுபவர்களுக்கும் போதுமான எண்ணிக்கையில் இவை சென்று சேருவதை உறுதி செய்வதே சவால்” என்று பெர்க்லி பிபிசியிடம் கூறினார்.

ஜெர்மன் பயோடெக்னாலஜி நிறுவனமான க்யூர்வாக் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்தை ஏற்கனவே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது நாட்டு மக்களுக்காக மட்டும் பிரத்தியேகமாகப் பெற முயற்சி செய்து அது தோல்வியில் முடிந்ததாக ஜெர்மன் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நன்றி-பிபிசி