கேப்பாபிலவில் மேலும் 6 கடற்படையினருக்கு கொரோனா ; வெலிகந்தைக்கு அனுப்பப்பட்டனர்

முல்லைத்தீவு- கேப்பாபிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் ஆறு சிறிலங்கா கடற்படையினருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று இருப்பதாக இனங்காணப்பட்ட ஆறு கடற்படையினரும் வெலிகந்தை வைத்தியசாலைக்கு இன்று வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகந்தன் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தலுக்காக வெலிசறையிலிருந்து கேப்பாபிலவு விமானப்படைத்தளம் உள்ளிட்ட தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அண்மையில் 400 கடற்படையினர் அழைத்துவரப்பட்டனர். அவ்வாறு அழைத்துவரப்பட்டவர்களில் 99 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுநேற்று அறிவிக்கப்பட்டது. அவர்கள் நேற்று வெலிகந்தை வைத்தியசாலைக்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மேலும் ஆறு பேருக்கு தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் ஆறு பேரும்வெலிகந்த வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என வைத்தியர் சுகந்தன் மேலும் கூறினார்.