கூட்டமைப்புடன் எந்த விடயத்திலும் முன்னணி இணைந்து செயல்படாது – கஜேந்திரகுமார்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இனிவரும் காலங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடயத்திலும் இணைந்து செயல்படாது என்று அந்தக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அவரின் கட்சித் தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். அத்துடன், “நீண்ட காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்று வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பானது கடந்த தேர்தலின்போது சிறிய ஆட்டம் கண்டிருந்த நிலையிலும்கூட தற்போதைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆதரித்து கையொப்பமிட்டு அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.

“இது தமிழ் மக்கள் மீது மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முதுகில் குத்திய ஒரு செயற்பாடாகும். எனவே, இவ்வாறான தமிழ்த் தேசியக் கூட்ட மைப்போடு ஒற்றுமையை வலியுறுத்து வதற்காக அனைத்து கட்சிகளையும், இணைப்பதாக இனி எந்த சிவில் சமூகத்தினரோ, மதகுருமாரோ முன் வரவேண்டாம். எனவே, அவ்வாறான முயற்சிகளை கைவிட வேண்டும். அத்தோடு நாமும் பாராளுமன்றத்திலும், வேறு செயல்பாடுகளிலும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புடன் இன்றிலிருந்து சேர்ந்து பயணிக்க மாட்டோம்” என்றார்.