கூட்டமைப்பினர் எங்களை மறந்து செயற்படுகின்றார்கள்-காணாமல் போன உறவுகளின் உறவுகள்

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எமது தலைவர்கள் எதிர்த்து வாழ்களித்து அரசுக்கு எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும் என விலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சியில் இன்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவி திருமதி யோகராசா கனகரஞ்சினி இந்த கோரிக்கையை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “எமது அரசியல் தலைமைகள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் இதய சுத்தியுடன் செயற்படவில்லை. வெளிநாடுகளிற்கு செல்கின்றனர், பிரதிநிதிகளாக ஜெனிவாவிற்கு செல்கின்றனர். நாடாளுமன்ற அமர்வுகளில் தவறாது கலந்துகொள்கின்றனர். ஆனால் எமது பிரச்சினைகள் தொடர்பில் அவர்கள் பேசியதாக தெரியவில்லை.

காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் தொடர்பில் அக்கறை அற்றவர்களாகவும், மறந்தவர்களாகவும் எமது அரசியல் தலைமைகள் செயற்படுகின்றன.

இந்த நிலையில் தமிழ் மக்களின் நலனிற்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளிற்காகவும் வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிர்ப்பை வெளியிட வேண்டும். நம்பிக்கையில்லா பிரேரணைக்கான வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்து அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விடயங்களை மறந்து இன்று கம்பெரலியவிற்கு்ம, சமுர்த்தி உள்ளிட்ட அபிவிருத்திகளிற்கும் முன்னுரிமை கொடுத்து செயற்படுவதை நாம் காண்கின்றோம்.

எமது பிரச்சினைகள் தொடர்பில் பேசுவார்கள் என எதிர்பார்த்த அவர்கள் இன்று அவற்றை மறந்து செயற்படுகின்றனர்” என குற்றம் சாட்டினார்.