கதிரியக்கப் பொருட்களுடன் சீனக் கப்பல்: வெளியேற இலங்கை உத்தரவு

கதிரியக்கப் பொருள்களைக் கொண்ட சீனக் கப்பலை ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை விட்டு வெளியேறுமாறு இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகிலுள்ள ஆழ்கடலில் பயணித்தபோது  தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றதையடுத்து, குறித்த கப்பல்,  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட  அனுமதி கோரியமை தெரியவந்துள்ளது.

ஆனால் கப்பல் பரிசோதிக்கப்பட்டபோது, ​​அதில் கதிரியக்க பொருட்கள் சேமிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இதனையடுத்து குறித்த கப்பலை துறைமுகத்தை விட்டு வெளியேறுமாறு  உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த சீனக் கப்பலில் அணு சக்திக்கு பயன்படுத்தப்படும் யுரேனியம் எனப்படும் இராசயன பொட்கள் உள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் எச்.எல்.அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான இரசாயன பொருட்களை நாட்டிற்கு கொண்டு வரும் போது, விசேட அனுமதி பெறப்படல் வேண்டும் எனவும்  அவர் கூறியுள்ளார்.

இருப்பினும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள கப்பலுக்கு எவ்வித அனுமதியும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை எனவும் இதனால் துறைமுகத்திலிருந்து கப்பலை வெளியேற்றுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த கப்பல் தற்போது துறைமுகத்திற்கு வெளியில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.