ககனத்தில் உலவி வரும் தியாகிகளைப் பாடு குயிலே
இன்சுவையி லிசைபாடும் மாந்தோப்புக் குயிலே
மாங்கனியின் சுவையினினும் உனது குரல் இனிதே
தேன்சொட்டும் குரலினிலே கவியொன்று பாடி
மாவீரர் தியாகத்தைப் புகழ்ந்திடுவாய் குயிலே
பூவெங்கும் புகழ்பரப்பும் தலைவன்குரல் கேட்டு
ஆவேசங் கொண்டுடனே ஆயுதங்க ளேந்தி
சாவொன்றும் களம்புகுந்து கசடர்களை மடக்கி
ககனத்தி லுலவிவரும் தியாகிகளைப் பாடேன்
மலையிலிருந் தூற்றெடுத்துப் பாய்கின்ற புனலே
நிலையெடுத்துப் பகைசரித்த மறவர்களைப் பாடு
அலையலையாய்த் தொடர்ந்துவந்த சிங்கங்களை வீழ்த்தி
அகிலத்தை அதிரவைத்தமா வீரர்களைப் பாடேன்
வான்மீது திரண்டொன்றாய் அசைந்தாடும் முகிலே
வளம்பெருக்கிக் களமாடிச் சாதனைகள் படைத்து
கானூடு ஊடுருவி யூர்ந்துவந்த பகையை
இருளூடு சிதறடித்தமா வீரர்களைப் பாடேன்
காரிறுக்கச் சூல்முற்றிப் பெய்கின்ற மழையே
கடல்மீது நடமாடிக் கொடுமைகளைப் புரிந்த
கடற்படையின் கப்பல்களைக் கடலுள் மூழ்கடித்து
நீரோடு நீரானகடற் கன்னியரைப் பாடேன்
சோலையினி லெழில்பரப்பும் நறுமணத்தின் மலரே
சொந்தபந்தப் பற்றறுத்து சிங்களமும் திகைக்க
முந்திமுதற் கரும்புலியாய்த் தலைவன்கரம் பற்றி
நெல்லியடி முகாம்தகர்த்த மில்லர்புகழ் பாடேன்
கீழ்வானி லெழுந்துலகின் இருளகற்றும் நிலவே
வீசுமொளி வீச்சினிலே தலைவன்புகழ் பாடு
தாழ்ந்துநின்ற தமிழினத்தை தலைநிமிர்த்தி வாழவைத்து
வீங்குபுகழ் சேர்த்தவந்தத் தேவன்புகழ் பாடு
கொண்டலெனக் கருக்கூட்டி அண்டமெலா மதிரவைத்து
கோரமுகத் தோடுதலை விரித்தாடும் புயலே
மண்டலங்க ளதிரவைத்து அதிரடியால் இனமழித்த
சண்டியரைச் சரித்தமா வீரர்களைப் பாடேன்
பகலிரவைப் பகுத்துவைக்கப் பம்பரமாய் சுழன்றுநின்று
பகலவனில் நிழலுமிட்டு உருமறைக்கும் பூப்பந்தே
பெருமெடுப்பில் குண்டுகளால் இனமழித்த விமானங்களை
எரிமலையாய்ப் பொசுங்கவைத்த கரும்புலிகள்புகழ் பாடேன்
பூவிலுறை யுயிரினங்கள் அத்தனைக்கும் வாழ்வளித்து
ஆவியுயிர்ப் பாகிநிற்கும் எரிதழற் செங்கதிரே
தேவனெனத் தமிழீழம் படைத்ததனை யாண்டுநின்ற
மாமன்னன் தேசியத் தலைவன்புகழ் பாடேன்.